ஞாயிறு, 19 மே, 2019

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
தினத்தந்தி : திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் திருப்பரங்குன்றம் தொகுதி சற்று வித்தியாசமானது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த தொகுதி 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் பள்ளிக்கூடங்களில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 80 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள், 16 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர்.


இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, தொகுதி முழுவதும் மொத்தம் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 71 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளது.

சூலூர்

கோவை மாவட்டம் சூலூரில் 324 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு 130 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.

சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர் பெண்கள், 18 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

அரவக்குறிச்சி

கரூர் மாவட்டம் அரவக் குறிச்சியில் 250 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும்.

அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 99 ஆயிரத்து 52 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 219 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

சூலூரில் 22 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்களும் (4 பெண்கள்), திருப்பரங்குன்றத்தில் 37 வேட்பாளர்களும் (ஒரு பெண்), ஓட்டப்பிடாரத்தில் 15 வேட்பாளர்களும் (ஒரு பெண்) போட்டி களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடக்கம்

இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கும். ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4 தொகுதிகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 939 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். மத்திய ஆயுத போலீஸ் படையினர் 1,300 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள்.

வெப் கேமராக்கள்

அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 16 வேட்பாளர் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் சேர்க்கப்படும்.

இந்த இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மறுதேர்தல்

கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. சில இடங்களில் மாதிரி வாக்குப்பதிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழிக் காமல் விட்டுவிட்டனர்.

அதன் அடிப்படையில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மறுவாக்குப்பதிவும் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடியும்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 195-ம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது

கருத்துகள் இல்லை: