ஞாயிறு, 19 மே, 2019

பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!

பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!மின்னம்பலம் : மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகா மக்கள் முன்னணி திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. 60 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், 21 இடங்களில் வென்ற பாரதிய ஜனதா கட்சியானது நாகா மக்கள் முன்னணியின் நான்கு இடங்கள், தேசிய மக்கள் கட்சியின் நான்கு இடங்கள், லோக் ஜனசக்தி கட்சி மற்றும் சுயேச்சை வென்ற ஓர் இடம் எனப் பல்வேறு கட்சிகளுடன் பலமாகக் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. பாஜகவைச் சேர்ந்த பிரென் சிங் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக நாகா மக்கள் முன்னணி நேற்று (மே 18) அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அச்சும்பீமோ கிகோன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். கோஹிமாவில் உள்ள நாகா மக்கள் முன்னணியின் மத்திய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த தகவலை நாகா மக்கள் முன்னணியின் மணிப்பூர் மாநிலத் தலைவரான அவாங்போ நெவ்மையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“கூட்டணியில் இருக்கும் தங்களை பாரதிய ஜனதா கட்சி மதிக்கவும் இல்லை; மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இல்லை. அதனால்தான் ஆதரவைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் நாகா மக்கள் முன்னணியின் கட்சிக்குள் நிலவும் சில முக்கியப் பிரச்சினைகளுக்கு பாஜகவே காரணம் என அக்கட்சி கருதுவதன் காரணமாகவே ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நாகா மக்கள் முன்னணியின் முடிவால் ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: