ஞாயிறு, 19 மே, 2019

காந்தி தீவிரவாதி; கோட்சே பயங்கரவாதி: திருமாவளவன்

மின்னம்பலம் : காந்தி தீவிரவாதி; கோட்சே பயங்கரவாதி: திருமாவளவன்காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும், கோட்சே இந்து பயங்கரவாதி என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் நினைவேந்தல் கூட்டம் நேற்று (மே 18) நடந்தது. இந்த நிகழ்ச்சியில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்குச் சுடர் ஏந்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், “அம்பேத்கரிய இயக்கங்களுக்குள் இடைவெளி இருப்பதற்கு கருத்தியல்தான் காரணம். பாரதிய ஜனதா கட்சியின் கடுமையான கருத்தியல் எதிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால், எல்லா அம்பேத்கரிய இயக்கங்களும் அப்படியில்லை. அதனால்தான் பஸ்வான் பாஜகவை ஆதரிக்கிறார்.

பாஜகவின் சனாதன கோட்பாடுகளை விசிக எதிர்க்கிறது. எனவேதான் கமல்ஹாசனின் கருத்தை இப்போது ஆதரிக்கிறேன். கமல்ஹாசனோடு நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். நாதுராம் கோட்சேவை இந்து தீவிரவாதி என கமல் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? கோட்சேவை தீவிரவாதி என்றுகூட சொல்லியிருக்கக் கூடாது. ஒருபடி மேலே போய் இந்து பயங்கரவாதி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்” என்றார்.
தீவிரவாதி என்றால் ஆங்கிலத்தில் extremist, பயங்கரவாதி என்றால் terrorist. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்ற திருமாவளவன், “நான் சொல்கிறேன் காந்தியடிகளே ஒரு இந்து தீவிரவாதிதான். காந்தியடிகளைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. இதை நான் சொல்வது இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அல்ல. இது வரலாறு. அம்பேத்கரின் பார்வையிலும், பெரியாரின் பார்வையிலும் காந்தியடிகள் ஓர் அதி தீவிர இந்து வெறியர்தான். மூச்சுக்கு 300 தடவை காந்தி ஹரே ராம் என்றுதான் சொல்லுவார். ஒருவன் என்ன சாதியில் பிறந்திருக்கிறான் என்றால் அது அவன் முற்பிறவியில் செய்த கர்மவினை என்று சொல்லுகிற கருத்தியல் காந்திக்கு உண்டு. கர்மவினையின் மீது ஒருவருக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் அவர் தீவிரமான இந்து என்றுதான் பொருள்” என்றார்.
எந்நேரமும் இந்துக்களின் நலன்களுக்காகச் சிந்தித்துக்கொண்டிருந்த, காந்தியை ஒரு இந்து சுட்டுக்கொன்றார் என்றால் அது தீவிரவாத செயலா அல்லது பயங்கரவாத செயலா என்பதை பிஜேபிகாரர்கள் தான் சொல்ல வேண்டும் என்றும் திருமாவளவன் பேசினார்.

கருத்துகள் இல்லை: