வியாழன், 23 மே, 2019

தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்.. ஒப்புகை சீட்டு சரிபார்க்க ...'

தேர்தல்தேர்தல்vikatan.com - தினேஷ் ராமையா : வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள நாடு முழுவதுமுள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 90.99 கோடியாக இருந்தது. மொத்த வாக்குப்பதிவு 67.11 சதவிகிதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவற்றில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பிரித்து வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
அதற்கு முன்பாக தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நாள்களில் பிற்பகலில் யார் ஆட்சிக்கு வருவார் என்பது குறித்த தெளிவான பிம்பம் கிடைத்துவிடும்.
ஆனால், இந்தமுறை அந்தத் தெளிவான பிம்பம் சில மணிநேரங்கள் தாமதமாகவே கிடைக்கும் என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரம். இதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க ஆகும் கூடுதல் நேரத்தையே.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையுடன் சரிபார்க்கப்படும். நாடு முழுவதும் ஏறக்குறைய 10.3 லட்சம் வாக்குப் பதிவு மையங்கள் இருக்கின்றன. இவற்றில் 20,600 வாக்குப்பதிவு மையங்களில் உள்ள விவிபாட் இயந்திரங்கள் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.
ஒருவேளை இரண்டு எண்ணிக்கையிலும் மாறுதல் ஏற்படும்சூழலில், விவிபாட் எந்திரங்களின் எண்ணிக்கை இறுதி எண்ணிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த சரிபார்ப்புக்கு 4 முதல் 5 மணி நேரம் கூடுதலாக செலவாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் முடிவுகள் தெரியவர கூடுதலாக சில மணிநேரங்கள் தாமதமாகலாம் என்கிறார்கள். அதேபோல், தபால் வாக்குகள் எண்ணவும் கூடுதல் நேரம் ஆகும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: