புதன், 22 மே, 2019

தூத்துக்குடி மே 22ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்.... ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் .. ஸ்டாலின்

tamil.cdn.zeenews.com : சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான
போராட்டத்தில் அதிமுக அரசின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் திமுக அரசு அமைந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைத்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: ஸ்டாலின் அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சுற்றுப்புறச் சூழலுக்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகியாமல், போராடியவர்கள் மீது அதிமுக அரசு ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டை மறக்கவே முடியாத மே 22ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். மாணவி உள்ளிட்ட 13 அப்பாவிகளின் உயிரைப் பறித்த அந்தக் கொடூர துப்பாக்கிச் சூட்டினை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஆதரித்துப் பேசிய மனிதாபிமானமற்ற செயலையும் மறக்க முடியாத நாள்.
இந்தத் துப்பாக்கிச் சூடு -தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல- தமிழக மக்களை- ஏன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை மிகுந்த அதிர்ச்சியில் உறைய வைத்த நாள் என்பதை நினைத்து வேதனை ப் படுகிறேன்.

கருத்துகள் இல்லை: