வெள்ளி, 24 மே, 2019

தினகரனின் கணக்கு! – தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் சசிகலா உறவுகள்..

சசிகலாதினகரன்33…12…7… தினகரனின் கணக்கு! – தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் சசிகலா உறவுகள்.. 
ஆ.விஜயானந்த்  - vikatan:  : “எதிர்பார்க்கும் தோல்விக்கும் தலையில் இடி விழும் அளவுக்கான தோல்விக்கும் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. தினகரன், தன்னைச் சுற்றியிருக்கும் சிலர் மட்டுமே சொல்வதை வைத்துக்கொண்டு செயல்பட்டார். அவருக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருந்த அ.ம.மு.க வேட்பாளர், தற்போது மக்கள் நீதி மய்யத்தோடு வாக்கு வித்தியாசப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்.”
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஸ்டாலினுக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடிக்கும் ஓரளவுக்கு நிம்மதியைத் தரத் தொடங்கியுள்ளன. `வாக்கு எண்ணிக்கை முடிவில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகளைத் தக்க வைக்க முடியும்?’ எனக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை. `இந்தத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்குக் கிடைத்த தோல்வி சசிகலா ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. சசிகலாவை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் தினகரன்’ எனக் கொதிக்கின்றனர்.


`நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் தமிழக மக்கள் வெவ்வேறு மனநிலையில் அணுகுவார்கள்’ என்பதை இன்றைய வாக்கு எண்ணிக்கைக் காட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி முன்னணியில் இருந்தாலும், அந்தத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளத்தில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது. இதேநிலைதான், பல தொகுதிகளில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு மாற்றாகக் களமிறங்கிய தினகரனுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள். பல தொகுதிகளில் மூன்றாவது, நான்காவது இடங்களையே டி.டி.வி-யின் வேட்பாளர்கள் பிடித்து வருகின்றனர். “வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அ.ம.மு.க அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பரோலில் வருவதற்கும் விண்ணப்பித்துவிட்டார் சசிகலா. ஆனால், களநிலவரம் இந்தளவுக்குத் திசைமாறும் என அவர் எதிர்பார்க்கவில்லை” என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினர் மன்னார்குடி குடும்ப உறவுகள் சிலர். இதுதொடர்பாக மேற்கொண்டு நம்மிடம் பேசியவர்கள்,
எடப்பாடி பழனிசாமி
“தேர்தல் முடிவுகள் திசைமாறுவதை சசிகலாவும் தினகரனும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, இடைத்தேர்தலில் அ.தி.மு.க இந்தளவுக்கு வாக்குகளை வாங்கும் என டி.டி.வி எதிர்பார்க்கவில்லை. தேர்தலுக்கு முன்னதாக சசிகலாவைப் பல வகைகளிலும் அவர் நம்ப வைத்தார். ஆனாலும், சசிகலாவின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பு நடந்த சிறைச் சந்திப்பில், `தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற வைப்பார்கள். 33 தொகுதிகளில் உறுதியாக வெல்வோம்’ எனத் தினகரன் கூறியபோது, இந்தக் கூற்றை மறுத்துப் பேசினார் சசிகலா. அவர் பேசும்போது, `இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெரிய அளவுக்குக் கவனம் செலுத்த வேண்டாம். டி.டி.வி ஜெயித்தாலும் சென்ட்ரலில் என்ன செய்ய முடியும் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். அதனால் இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தங்க.தமிழ்ச்செல்வனை ஆண்டிபட்டியில் நிற்க வையுங்கள். அதேபோல் மற்ற தொகுதிகளிலும் நல்ல ஆட்களைப் போட்டு தேர்தல் வேலை பாருங்கள். செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். கணிசமான இடங்களை வென்றுவிடலாம்’ எனக் கூறியிருக்கிறார்.

இதை மறுத்துப் பேசிய தினகரன், `நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத் தேர்தல் நமக்குத்தான் சாதகமாக இருக்கிறது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என உறுதிபடக் கூறினார். அவரை நம்பிய சசிகலா, தேர்தல் செலவுக்கும் பெரும் தொகையை அளித்தார். வாக்குப் பதிவு முடிந்த பின்னரும், `33 சீட்டுகளை வெல்வோம், இடைத்தேர்தலில் அதிக இடங்களில் நமக்குத்தான் வெற்றி. அ.தி.மு.க நம் பக்கம் வந்துவிடும். அதனால் பரோலில் வருவதற்கு விண்ணப்பித்துவிடுங்கள்‘ எனத் தினகரன் தரப்பில் கூறியுள்ளனர். இதை சசிகலாவும் நம்பினார். இப்போது நிலவரமே திசைமாறிவிட்டது. தொடக்கத்திலேயே சசிகலா சொல்வதைக் கேட்டிருந்தால், ஓரளவுக்காவது இடைத்தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். தங்கத்தைத் தேனி எம்.பி தொகுதியில் நிறுத்தாமல் ஆண்டிபட்டியில் களமிறக்கியிருக்கலாம். எதையும் கேட்கும் மனநிலையில் தினகரன் இல்லை.
vikatan.com

கருத்துகள் இல்லை: