சனி, 13 ஏப்ரல், 2019

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!மின்னம்பலம் : மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் வழக்கைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப் பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானதால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளும் கோரிக்கைகள் எழுப்ப, மே 19ஆம் தேதி தமிழகத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூலூர் தொகுதியில் பொங்கலூர் நா.பழனிசாமி போட்டியிடுவார் என்றும், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவார் என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மருத்துவர் சரவணனும், ஓட்டபிடாரம் (தனி) தொகுதியில் எம்.சி.சண்முகையாவும் போட்டியிடுவார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூலூர் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, 2006-11 திமுக ஆட்சிகாலத்தில் கால்நடைத் துறை அமைச்சராக பதவிவகித்துள்ளார். திமுகவின் மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அமமுகவில் செயலாற்றிவந்த இவர் கடந்த டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்தார். அடுத்த ஒரு மாதத்திலேயே அவருக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோலவே திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் மருத்துவர் சரவணன். 2016 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தோல்வியைத் தழுவினார். தோல்வியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் தொடர்ந்த வழக்கில், ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டப் பிடாரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.சி.சண்முகையா, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்துவருகிறார்.
மார்க்சிஸ்ட், விசிக ஆதரவு
4 தொகுதி இடைத் தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: