திங்கள், 8 ஏப்ரல், 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : கலைஞர் இரண்டு ஆண்டுகளாக வீட்டு காவலில் வைக்கபட்டிருந்தார் .. ஸ்டாலின் மீது விசாரணை

கருணாநிதி வீட்டுச் சிறை குறித்து விசாரணை: எடப்பாடிமின்னம்பலம் : முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதியை 2வருடங்களாக வீட்டுச் சிறையில் வைத்திருந்தது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று குன்னூரில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தான் பிரச்சாரம் செல்லும் இடங்களிலெல்லாம் கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரண மர்மம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசி அதிமுக அரசையும் முதல்வரையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். விரைவில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விவகாரங்கள் குறித்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுவருகிறார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுத்துவருகிறார்.

இந்த நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து இன்று (ஏப்ரல் 8) குன்னூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதியை வெளியே அனுப்பாமல் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு திமுக செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “சயன், மனோஜ் ஆகியோருக்கு திமுகவினர் ஜாமீன் கொடுக்கிறார்கள். ஆக கூலிப்படையினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் துணைநின்று அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மூலமாக ஜாமீன் வாங்கித் தருகிறார் என்றால் அதில், அவருக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.
20 நாட்களுக்கு முன்பு சயனும், மனோஜும் ஒரு ஹோட்டலில், ஸ்டாலின் சொன்னதை எப்படி நிறைவேற்றலாம் என்று பேசிக்கொண்டிக்கிறார்கள். என்னை கொடநாடு விவகாரத்தில் எவ்வாறு இணைப்பது என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. முதல்வர் மீதே இவ்வாறாக பொய்யான வழக்கை ஜோடிக்கப் பார்க்கிறார்கள் என்றால் நாட்டு மக்கள் மீது எவ்வாறு பொய் வழக்கு போடுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று விமர்சித்தார்.

கருத்துகள் இல்லை: