சனி, 13 ஏப்ரல், 2019

கனிமொழி, கதிர்ஆனந்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மாலைமலர் ;தூத்துக்குடி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.
வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. மதுரை: ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் நம்பிக்கையை கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடு சீர்குலைய செய்துள்ளது. எனவே அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.



இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஐகோர்ட்டு அமர்வில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: