வெள்ளி, 12 ஏப்ரல், 2019

சதாசிவம்-MS சுப்புலட்சுமி திருமணம் ...... மறைத்த வரலாறுகள்

LR Jagadheesan : What makes one of the marriages sinful/regressive and the other holy/progressive? எந்த அடிப்படையில் இதில் ஒரு திருமணம் தீதான/ பிற்போக்கானதாகவும்
மற்றது
புனிதமான/முற்போக்கானதாகவும் திரும்பத்திரும்ப பொதுபுத்தியில் பதியவைக்கப்படுகிறது? ஒரு கட்சியும் ஒரு ஜாதிக்காரர்களும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஆபாசத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எந்தவித கூச்சமோ குற்ற உணர்வோ இன்றி கடத்திக்கொண்டே இருக்கப்போகிறார்கள்? எதெதற்கோ முறுக்குப்பிழியும் முற்போக்கு பெண்ணியங்கள் இதையெல்லாம் எதிர்த்து ஏன் எதுவுமே பேச மறுக்கிறார்கள்?
 பெரியார் மணியம்மை திருமணத்தைக்காட்டி வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்டார் என்று பொய்யாக கொச்சைப்படுத்தி பேசுவதை ஒரு அரசியல் செயற்பாட்டு இயக்கமாகவே செய்துகொண்டிருக்கும் அதே ஆட்கள் மதுரை ஷண்முகவடிவின் மகள் சுப்புலெட்சுமியை சதாசிவம் எப்படி திருமணம் செய்துகொண்டார் என்று மறந்தும் கேள்விகேட்பதில்லை. மாறாக “எம் எஸ் அம்மா” என்கிறார்கள். சதாசிவத்தை திருமணம் செய்து கொண்ட மதுரை ஷண்முகவடிவு சுப்புலெட்சுமியை அவரது திருமண முடிவை மதிக்கத்தெரிந்தவர்களுக்கு மணியம்மைக்கும் அதே போல் தன் திருமணம் குறித்து முடிவெடுக்க உரிமை உண்டு என்பது ஏன் தெரியாமல் போகிறது? 


எம் எஸ் “அம்மா” ஆகவும் மணியம்மை “மகள்” ஆகவும் இவர்கள் எதன் அடிப்படையில் கட்டமைக்கிறார்கள்? 
அவர்களின் கணவன்களின் ஜாதியைக்கொண்டா அல்லது அந்த இருவரும் யாருக்கு தொண்டுசெய்ய தம் திருமண முடிவை எடுத்தார்கள் என்பதைக்கொண்டா? பெரியார் மணியம்மை திருமணம் முடிந்து இருவரும் வாழ்ந்து முடிந்து இறந்தும் போனபின் இன்னும் ஆறாவது தலைமுறைக்கும் இதே பொய்யை, ஜாதியவன்மத்தை கடத்திக்கொண்டே இருப்பதன் நோக்கம் என்ன? 
அதை குத்திக்காட்டவே இந்த ஒப்பீடு. மற்றபடி மணியம்மையாரின் மண முடிவு எப்படி அவரது தனிப்பட்ட முடிவோ எம் எஸ் சுப்புலெட்சுமியின் மண முடிவும் அவரது தனிப்பட்ட முடிவு. அந்த மணவாழ்வில் அவருக்கு புகழும் செல்வாக்கும் கூடியது. ஆனால் தன்னளவில் எம் எஸ் மகிழ்ச்சியான மனுஷியாக வாழ்ந்தாரா என்கிற கேள்வியை அவர் வாழ்க்கை சரித்திரத்தை எழுதியவர்கள் எழுப்பினாலும் இவர்கள் யாரும் அதை விவாதப்பொருள் ஆக்குவதே இல்லை. ஆனால் மணியம்மையை பெரியார் ஏமாற்றிவிட்டார் என்கிற பொய்யை மட்டும் தலைமுறைக்கு தலைமுறை தவறாமல் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த அபத்தத்துக்கான எதிர்வினையே இந்த ஒப்பீடு

கருத்துகள் இல்லை: