புதன், 10 ஏப்ரல், 2019

வேல்முருகன் : எந்த தொகுதியிலும் பாமக வெற்றி பெற முடியாது:

தினகரன் :பாமக போட்டியிடுகின்ற 7 தொகுதியில் மட்டுமல்ல, எந்த தொகுதியிலும் அவர்கள் கூட்டணி வெற்றி பெற முடியாது என்று தவாக வேல்முருகன் பேசி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காந்தி பொதுமேடையில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது: வன்னியர் அறக்கட்டளைக்கு நிதி கொடுத்தவர் கலைஞர். கடந்த 1987ல் நடந்த
இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்த 21 பேரின் குடும்பங்களுக்கு மாதாந்திர பென்சன் வழங்கியவர் கலைஞர். ஆனால் வறுமையில் வாடும் இறந்துபோன  21 வன்னிய குடும்பங்களை அழைத்து ராமதாஸ் என்றாவது  தைலாபுரம் தோட்டத்தில் விருந்து வைத்தது உண்டா. இல்லை.


ஆனால் நேற்று வந்த இபிஎஸ், ஓபிஸ் வகையறாவிற்கு 80 வகையாண உணவு வகைகளுடன் விருந்து வைக்கிறார். மேலும் வன்னியர்களுக்கு பல்வேறு வகையில் உதவிய கலைஞரை அவர் இறந்த பிறகு நாக்கில் நரம்பில்லாமல் வாய்க்கு வந்தபடி ராமதாஸ் பேசுகிறார். தமிழகத்தில் தலித்துகளையும், வன்னியர்களையும் மோதவிட்டு ரத்தம் குடித்தவர் ராமதாஸ். நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிடுகின்ற 7 தொகுதியில் மட்டுமல்ல, எந்த தொகுதியிலும் அவர்கள் கூட்டணி வெற்றி பெற முடியாது. நீங்கள் உங்கள் வாக்குகளை பொன்கவுதம சிகாமணிக்கு வாக்களித்து உதயசூரியன் சின்னத்தை பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: