செவ்வாய், 15 ஜனவரி, 2019

விரைவில் தெஹெல்காவில் இருந்து எடப்பாடி பழனிசாமி பற்றிய அடுத்த அதிரடி.. எதிர்பார்க்கலாம்!

மின்னம்பலம் : “பொங்கல் பண்டிகைக்காக சேலத்துக்குப் போயிருக்கிறார்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பொங்கலை நிம்மதியாக கொண்டாடினாரா என்பது சந்தேகம்தான். ஜனவரி 13 ஆம் தேதியே சேலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வருக்கு பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பூரண கும்ப மரியாதையோடு வரிசையாக நின்று வரவேற்றனர். அவர்களின் வரிசை நீண்டதால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்தார் முதல்வர். விமான நிலையத்திலேயே கலெக்டர் ரோகினி, புதிய எஸ்.பி. தீபா கனிகர் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்குச் சென்றார் எடப்பாடி. அவர் கட்சி அலுவலகம் வருகிறார் என்ற தகவல் அறிந்ததுமே பத்திரிகையாளர்கள் அங்கே கூடி நின்றனர். பி.ஆர்.ஓ. அலுவலகத்தில் இருந்து முதல்வர் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக தகவல் சொல்லப்பட்டது. ஆனால், முதல்வர் கைகூப்பி கும்பிட்டுவிட்டு, ‘அப்புறம் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். வழக்கமாக பெரிதாக சிரித்து வைக்கும் எடப்பாடி லேசான வாட்டத்தோடுதான் கட்சி அலுவலகத்துக்குள் சென்றார்.

உள்ளே போய் அமர்ந்த முதல்வருக்கு கொஞ்ச நேரத்தில் கொடநாடு விவகாகரம் பற்றி ஸ்டாலின் அறிவாலயத்தில் பேட்டி அளிப்பது சேனல்களில் லைவ் ஆவது பற்றி சொல்லப்பட்டது. உடனே ஸ்டாலின் பேசுவதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, சட்டென தன் அருகில் இருந்த பேப்பரை எடுத்து குட்டிகுட்டியாய் குறித்து எழுதத் தொடங்கினார். முன்னாள் அமைச்சர் செம்மலையை அழைத்து, ‘ரிப்போர்ட்டர்ஸ் இருக்காங்களா போயிட்டாங்களா?’ என்று கேட்டார். ‘இருக்காங்க, வரச் சொல்லவா?’ என்று செம்மலை கேட்க, பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை... செம்மலையைப் பார்த்து, ‘நீங்களே பேட்டி கொடுத்துடுங்க’ என்று அப்செட் ஆகி உட்கார்ந்துவிட்டார்.

செம்மலை வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளே இருந்து துண்டு சீட்டுகளில் குறிப்புகளை எழுதி அலுவலக ஊழியரிடம் கொடுத்து அனுப்பியபடியே இருந்தார் . அதைப் பார்த்துப் பார்த்துதான் செம்மலை செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘22 மாதமாக நடக்கும் இவ்வழக்கில் திடீரென முதல்வரை சேர்த்ததில் சதி இருக்கிறது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தாலும் சந்திக்கத் தயார். பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது தமிழக முதல்வர் மீது மக்களுக்கு மிகப்பெரிய நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அதை மறைப்பதற்கும் திசை திருப்புவதற்கும் முதல்வர் மீது அபாண்டமாக பழி போடுகிறார்கள்’என்றெல்லாம் பேசினார் செம்மலை.
பின் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த நிகழ்வு அதே அலுவலகத்தில் நடந்தது. ரொம்பவும் கொதிப்பாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்த ஆட்சியை கலைக்க சதி செய்கிறார்கள். அது நடக்காது” என்று குறிப்பிட்டார். இதெல்லாம் ஜனவரி13 ஆம் தேதி நடந்த சம்பவங்கள். அன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டுக்குச் சென்றார் முதல்வர். அங்கே சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார்.
நேற்று ஜனவரி 14 முழுதும் சேலம் வீட்டிலேயே இருந்த முதல்வர் மக்களிடம் மனுவாங்குவது, சாதனை மாணவர்களை பாராட்டுவது என்றிருந்தவர் நேற்றுமாலை முதல் சயன், மனோஜ் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தபடியே இருந்தார். சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது, நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்தது ஆகிய தகவல்கள் உடனுக்குடன் சொல்லப்பட கடுமையான அப்செட் ஆகிவிட்டாராம் முதல்வர். மறுபடியும் இரவு 11 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு இருவரையும் அழைத்துச் செல்லும் தகவலும் முதல்வருக்கு சொல்லப்பட்டே நடந்திருக்கிறது. உளவுத்துறை அதிகாரிகளோடு இந்த விவகாரம் பற்றி உரையாடிவிட்டு எடப்பாடி உறங்கச் சென்றபோது இரவு 12. 30 என்கிறார்கள் சேலம் காவல்துறை வட்டாரத்தில்.
இன்று அதிகாலை எழுந்து காலை ஏழுமணிக்கே நெடுஞ்சாலை நகரில் இருந்து எடப்பாடி வட்டத்தில் இருக்கும் தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்துக்குப் புறப்பட்டார் முதல்வர். அப்போது தன்னை சந்தித்த காவல்துறை அதிகாரிகளிடம், ’சிலுவம்பாளையத்துக்கு எந்த பிரஸ்ஸும் வரவேண்டாம், நான் கிராமத்து முக்கியஸ்தர்கள்கிட்ட ஏற்கனவே பொங்கல் விழாவுக்கு வர்றதா வாக்கு கொடுத்துடேன். அதனாலதான் கேன்சல் பண்ணாம போறேன். நியூஸ் ஜெ கூட அங்கே வரவேண்டாம்’ என்று சொல்லிவிட்டே சிலுவம்பாளையம் சென்றார் முதல்வர். அங்கே இன்று காலை பொங்கல் கொண்டாடிவிட்டு, சிலம்பாட்டம், கோலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை பார்த்தவர், மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டிவிட்டார். ஆனாலும் எப்போதுமே தன் சொந்த ஊருக்கு வரும்போது இருக்கும் உற்சாகம் இந்த தடவை முதல்வரின் முகத்தில் மிஸ்ஸிங்” என்று முடிந்தது வாட்ஸ் அப் செய்தி.
அதைப் படித்து ஷேர் செய்த ஃபேஸ்புக் இதே விவகாரம் தொடர்பான தனது பதிவை டைப் செய்யத் தொடங்கியது.
“முதல்வர் இன்று ஜனவரி 15 காலை சேலத்தில் இருந்து சிலுவம்பாளையம் சென்றபிறகு காலை சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் திடீரென பத்திரிகையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்தார். அந்த பிரஸ் மீட்டில், ’கொடநாட்டில் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மரணத்தில் சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள். அது தவறான தகவல். கனகராஜ் மரணத்தில் எந்த சந்தேகமும் காவல் துறைக்கு இல்லை. விபத்து நடந்தபோது கனகராஜ் குடிபோதையில் இருந்தார். அதை நாங்கள் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறுதி செய்திருக்கிறோம். அதுவும் இல்லாமல், கனகராஜ் பைக்கில் போகும் போது இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக பாதை மாறி பைக்கை ஓட்டி விபத்தில் சிக்கி இருக்கிறார். அதை நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். கனகராஜ் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என அவரது சகோதரர் அப்போது பேட்டி கொடுத்திருக்கிறார். அதை பாருங்கள்...’ என பென் டிரைவில் காப்பி செய்து வைத்திருந்த ஒரு வீடியோ ஃபைலை ஓட விட்டார் டி.ஐ.ஜி.செந்தில்குமார்.

அந்த வீடியோவில், கனகராஜின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார். ‘விபத்து நடந்த உடனே மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் கனகராஜ் சகோதரர் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இப்போது விபத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். இவ்வளவு நாளாக இல்லாமல் இப்போது சந்தேகத்தை கிளப்ப வேண்டிய அவசியம் எங்கே இருந்து வந்தது? அதனால் இப்போது கிளப்பும் புகார்களில் உண்மை இல்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.
‘சந்தேகம் இப்போது வந்துடுச்சு... மீண்டும் விசாரிப்பீங்களா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்க... ‘ இந்த வழக்கை பொறுத்தவரை எல்லாமே தெளிவாக இருக்கு. அதனால் விசாரிக்க தேவையே இல்லை’ என்று சொல்ல வந்ததை சொல்லிவிட்டு, ‘பொங்கல் வாழ்த்துக்கள்’ என சொல்லி எழுந்துவிட்டார் டி.ஐ.ஜி. செந்தில்குமார்.
நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜ் இருவரையும் ஆஜர்படுத்தியபோது அவர்களை ரிமாண்ட் செய்ய நீதிபதி மறுத்துவிட்டார். இந்த தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரொம்பவே அப்செட்டில் இருந்தார். அதன் பின் நேற்றிரவு 12.30 வரை முதல்வர் உளவுப் பிரிவினருடன் நடத்திய ஆலோசனையின் விளைவுதான் இந்த பிரஸ் மீட் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். “ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து மீண்டும் ஒரு முக்கிய செய்தியை டைப் செய்தது வாட்ஸ் அப்.
“எடப்பாடி பழனிசாமியின் ஆரம்பகால நண்பர் ஒருவர் எடப்பாடியில் இருக்கிறார். 1979-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடந்த இரட்டை கொலை விபரங்களை முழுமையாக அறிந்தவராம் அந்த நண்பர். அந்த கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டாராம். ஆனால், அந்த கொலைகளுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இருக்கிறது என சொல்லி வருகிறாராம் அந்த நண்பர். இந்த விபரம் தெரிந்த தினகரன் டீம், சம்பந்தப்பட்ட அந்த எடப்பாடியின் நண்பரையும், இப்போது ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூஸையும் இணைத்து வைத்திருக்கிறதாம். எடப்பாடி பழனிசாமி குறித்த ஆரம்ப கால தகவல்களை விசாரிக்க ஆரம்பித்துவிட்டதாம்
மாத்யூஸ் டீம். விரைவில் எடப்பாடி பழனிசாமி பற்றிய அடுத்த அதிரடியை தெகல்காவில் இருந்து எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். இதெல்லாம் அறிந்துதானோ என்னவோ மூன்று நாட்களாகவே கடுமையான அப்செட்டில் இருக்கிறார் முதல்வர். சிலம்பாட்டம், மாடுகளுக்கு பொங்கல் ஊட்டல் என்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் முதல்வரின் கண்ணில் ஒரு சோகம் தெரிகிறது என்கிறார்கள் இன்று சொந்த ஊரான சிலுவம்பாளையம் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தவர்கள்”என்று முடிந்தது செய்தி.

கருத்துகள் இல்லை: