ஞாயிறு, 13 ஜனவரி, 2019

இந்தி தெரியாது; முடிஞ்சத பார்த்துக்கோங்க..!’’ - மும்பை விமான நிலையத்தில் தமிழருக்கு நடந்தது என்ன?

ஆபிரஹாம்ஆபிரஹாம்.vikatan.com-aswini.s" : மும்பை விமான நிலைய குடியுரிமை அதிகாரி ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பிஹெச்.டி மாணவருக்கு இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்தால் அவமானப்படுத்தி சான்றிதழ் தரவும் மறுத்த சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலில்  நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்.. தமிழகத்தைச் சேர்ந்த பிஹெச்.டி மாணவர் ஆபிரஹாம் சாமுவேல் (வயது 27) அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெறவிருக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க் கிழமை (8.1.2019) அமெரிக்கா செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றார். அங்கு அவரின் சான்றுகளை சரி பார்த்த குடியுரிமை அதிகாரிகளில் ஒருவர் இவரிடம் இந்தியில் எதையோ கேட்டுள்ளார். அதற்கு ஆபிரஹாம் மிகவும் கனிவாக எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பதிலளித்திருக்கிறார்.


அதற்கு அந்த அதிகாரி கடுமையான குரலில்  ``உனக்கு இந்தி தெரியாதா அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ'’ என்று அவமானப்படுத்தினார். இதனால் கோவமடைந்த ஆபிரஹாம் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக ட்வீட் செய்தார்.  ``தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் எனக்குத் தெரிந்திருந்தது. அதனால், மும்பை சத்ரபதி விமானநிலையத்தில்,  `உனக்கு இந்தி தெரியாதா அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ' என்று குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமானப்படுத்தினார். அங்கேயிருந்த 3 அதிகாரிகளில் ஒருவர் மட்டும் அப்படி நடந்துகொண்டார்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு எனக்கு விமானம். இல்லையென்றால் இந்தியாவிலிருந்து புகார் அளித்திருப்பேன்'' என்று பதிவிட்டிருந்தார். தன் பதிவில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் டேக் செய்திருந்தார்.

 ``தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால் பதிக்க முடியாததற்கு இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணம். அந்தக் குடியுரிமை அதிகாரி என்னிடம் ஆங்கிலத்தில் உரையாட மறுத்துவிட்டார். உனக்கு வேண்டுமானால் தமிழ் குடியுரிமை கவுன்டருக்கு போய் சான்றிதழ் சரிபார்த்துக் கொள் என்று அவமானப்படுத்தினார் ’’

``நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதைவிடத் தமிழனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கு நான் தமிழர் என்பதுதான் பிரச்னை என்றால் உங்களை இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டாம். நான் இந்தியன். ஆனால், எனக்கு இந்தி தெரியாது. முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்’’

இவ்வாறு வரிசையாக ட்வீட் தட்டினார் ஆபிரஹாம். இதையடுத்து ட்விட்டரில் பெரும் விவாதம் கிளம்பியது. ஆபிரஹாமின் பதிவை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் ரிடிவீட் செய்து மத்திய அரசை விமர்சித்தனர். இதையடுத்து ஆபிரஹாமை அவமானப்படுத்திய அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்குக் குடியுரிமை சான்றும் வழங்கப்பட்டது.
ஆபிரஹாம்
இந்த சம்பவம் குறித்து ஆபிரஹாம்  `Mumbaimirror' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது,

 ``அமெரிக்காவில் படிக்கும் நான் விடுமுறைக்கு இந்தியா வந்தேன். மதுரையில் இருக்கும் என் பெற்றொருடன் ஒரு மாதம் செலவழித்துவிட்டு கடந்த செவ்வாய்க் கிழமை அமெரிக்கா செல்ல மும்பை சர்வதேச விமான நிலையம் வந்தேன். நள்ளிரவு 1.30 மணிக்கு விமானம். எனவே, 12.30 மணிக்கு பாஸ்புக் உள்ளிட்டவற்றை சரிபார்க்க 33-வது கவுன்டரில் நின்று கொண்டிருந்தேன். வரிசையில்  எனக்கு முன்பு ஒரு வெளிநாட்டுப் பெண் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் அந்தக் குடியுரிமை அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடி அனுப்பி க்ளியரன்ஸ் கொடுத்து அனுப்பினார். என்னைப் பார்த்ததும் இந்தியில் பேசத் தொடங்கினார். மன்னிக்கவும் எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றேன். அதற்கு அவர் இந்தி தெரியாவிட்டால் தமிழுக்குத் தனி கவுன்டர் இருக்கிறதா என்று தேடு போ என்று கடிந்துகொண்டார். ``இந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டுக்குப் போ’’ என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொன்னார். உடனே நான் மேலதிகாரிகளிடம் சென்று புகார் தெரிவித்தேன்.

மேலதிகாரிகள் அவரை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தனர். ஆனால், அவர் உயர் அதிகாரிகள் முன்பும் தன் நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை. `இந்தியாவிலிருந்து கொண்டு இந்தி தெரியாது என்கிறார். தமிழ்நாட்டுக்கே போக சொல்லுங்கள்’ என்று அதிகாரிகள் முன்பே கோபமாகச் சொன்னார். அந்த உயர் அதிகாரி என்னை வேறு கவுன்டருக்கு அனுப்பி க்ளியரன்ஸ் செய்ய உதவினார். எனக்கு விமானத்துக்கு நேரமாகிவிட்டதால் அந்தக் குடியுரிமை அதிகாரி மீது அதிகாரபூர்வ புகார் தெரிவிக்க முடியாமல் போனது. ஆனால், அங்கு நடந்த அனைத்து சிசிடிவி-யில் பதிவாகியிருக்கும். எனக்கு ஒருகட்டத்தில் கோபம் அதிகரித்தது. இந்தியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் தமிழர்களுக்கு மதிப்பு இருக்கிறது. எனக்கு நேர்ந்த இந்த அவமானம் இன்னொரு முறை யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் விஷயத்தை ட்விட்டருக்கு கொண்டு சென்றேன்.  மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார் ஆபிரஹாம்.

 ``இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். பொதுவாகக் குடியுரிமை அதிகாரிகள் 12 மணி நேரம் பணியில் இருப்பதால், மனச்சோர்வில் இருப்பார்கள். அவர்களில் சிலர் இப்படி நடந்துகொள்வதை தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்கிறோம்’’ என்று போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: