வியாழன், 5 ஜூலை, 2018

தமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை,,,

ஐ.டி ஊழியர்கள்விகடன்  : இரா.செந்தில் குமார் - பெ.மதலை ஆரோன்t;
இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி ஊழியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர்.
நேற்று சென்னைத் துரைப்பாக்கத்திலிருக்கும் தனது அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் பிரியங்கா. இதற்குக் காரணம் அவரின் சொந்தப் பிரச்னையா… அல்லது உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியா என்கிறரீதியில் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். பிரியங்கா மட்டுமல்ல, கடந்த மாதம் பெங்களூரைச் சேர்ந்த பவேஷ் ஜெய்ஷ்வால், வொய்ட்ஃபீல்டிலிருக்கும் அலுவலகத்தின் 12-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அப்படியே பின்னோக்கிச் சென்றால், மாதம் ஒருவர் அல்லது இருவர் ஐ.டி துறையில் தற்கொலை செய்துகொண்டு இறப்பது தொடர்ந்து நடப்பது தெரியவரும். அவற்றில், `விஷமருந்தி தற்கொலை’, `ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை’… எனக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலும் உண்டு. கடந்த ஆண்டு புனேவில் ஐ.டி ஊழியர் துர்கா பிரசாத், குறிப்பொன்றை எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அந்தக் குறிப்பில் `ஐ.டி வேலையில் பாதுகாப்பு இல்லை. என் குடும்பத்தை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. நாம் (ஐ.டி ஊழியர்கள்) வலுவாக இல்லை’ என்றெல்லாம் எழுதியிருந்ததாக அவரின் வழக்கை விசாரித்த காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
அவருக்கு மட்டுமல்ல, ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பலரும் ஒருவித மன நெருக்கடியில்தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இலக்குகளை நோக்கி நேரம், காலமில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்த்தால், `கை நிறையச் சம்பளம், சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்று தோன்றும். அதற்காக அவர்கள் படும் அல்லல்கள் சொல்லி மாளாது. 2010 லிருந்து 2015 வரை மட்டும் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி ஊழியர்களின் எண்ணிக்கை 58,679. இதில் 8,233 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில்தான் இறந்துபோயிருக்கிறார்கள்.



ஐ.டி ஊழியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து தகவல் தொழில்நுட்பப் பணியாளர் சங்கத்தின் செயலாளர் வினோத் விவரிக்கிறார்…
“ `எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டு நீக்கப்படலாம்’ என்பதுதான் முதல் நெருக்கடி.. எட்டு வருடங்களுக்கு மேலாக வேலைவினோத் பார்ப்பவர்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வேலையைவிட்டு நீக்கிவிடுகிறார்கள். அதனால், டீமில் எட்டுப் பேர் பார்த்த ஒரு வேலையை ஆறு பேர் பார்க்கவேண்டிய சூழல் உருவாகிறது; பணி நெருக்கடி அதிகமாகிறது. எட்டு மணி நேரம் போய் பத்து பணி நேரம், பதிமூன்று மணி நேரமெல்லாம் வேலை பார்க்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வேலை பறிபோய்விடுமோ என பயந்தே பலர் எந்த மறுப்பும் சொல்லாமல் கொடுக்கிற வேலையைச் செய்துவருகிறார்கள். சிலருக்கு வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது. அதேபோல இரண்டு மாதங்கள் செய்த வேலையை ஒரு மாதத்தில் முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால்தான் அவரவருக்கான இலக்குகளை முடிக்க முடியும். அதனால் குடும்பத்தையும் சரியாகக் கவனித்துக்கொள்ள முடிவதில்லை.

இப்போது அஜெயில் (Agile) என்கிற ஒரு புதிய நடைமுறை ஐ.டி துறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தினமும் நாம் செய்த வேலைகளைக் குறித்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இந்த முறையால் சில நன்மைகள் இருந்தாலும், மாதத்துக்கு ஒரு ரிப்போர்ட் என்கிற நிலை மாறி, தினமும் பதில் சொல்லவேண்டிய நெருக்கடி உண்டாகிறது. வீட்டுக்குச் சென்றாலும், கம்ப்யூட்டரில், மெசஞ்சரில் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.
மீட்டிங்
கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்துக்குள் வேலையை முடிக்காவிட்டால், கண்டிப்பாக வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள். இந்த வேலையை நம்பித்தான் ஒவ்வொருவரின் குடும்பமும் இருக்கிறது. அந்த வருமானத்தை நம்பி ஏராளமான கடன்களும் வாங்கியிருப்பார்கள். நெருக்கடி அதிகமாகி, தாங்க முடியாத நிலைக்கு வரும்போது தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.
வசுமதிஎங்களுக்கு அரசுத் தரப்பிலும் சரி, நிறுவனங்களின் தரப்பிலும் சரி… எந்த உதவியும் கிடைப்பதில்லை. நிறுவனங்கள், பணியார்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. நிறுவனத்தின் முன்னேற்றத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நிர்வாகிகள், பணியாளர்களை அழைத்து, அவர்களின் பிரச்னைகளையும் பேசினால் இந்தச் சிக்கல் தீரும். தொழிலாளர் ஆணையர் மற்றும் அரசுத் தரப்பிடம் இதற்காகக் கோரிக்கை வைக்க இருக்கிறோம். `தற்கொலை தீர்வு அல்ல, இணைந்து செயல்படுவோம்’ என்பதை எங்கள் அமைப்பின் சார்பாகப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.’’
பணிச்சூழலில் பெண்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து ஐ.டி.ஊழியர் வசுமதி விவரிக்கிறார்…
“திருமணம் ஆகிவிட்டால், குழந்தை பெற்றுவிட்டால் பெண்களுக்குச் சரியான புராஜெக்ட் கொடுக்க மாட்டார்கள். அவர்களின் உழைப்புக்கேற்ற பதவி உயர்வையும் வழங்க மாட்டார்கள். இதனாலேயே பல பெண்கள் மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அதேபோல, ஒரு பெண் பணியாளரின் டீம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அதனால் யாருடனும் தொடர்ச்சியாக நட்பாக இருக்க முடியாது. புதியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். யாரிடமும் எதையும் நம்பிப் பகிர்ந்துகொள்ள முடியாது. சமூகத் தொடர்பே இல்லாமல் போய்விடும். அதேபோல, பணியாளர்களுக்குள்ளேயே ஒரு போட்டியை உருவாக்கிவிடுவார்கள். அதனாலும் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ள மனம் வராது.
பெண்கள்
பெண்கள் யாராவது, `நைட் ஷிஃப்ட் வர முடியாது’ என்று சொன்னால், `சம்பளம் மட்டும் ஒரே மாதிரியாத்தானே வாங்குறீங்க… நைட் ஷிஃப்டுக்கு மட்டும் வர முடியாதா?’ என்று சக பணியாளர்களே கேட்பார்கள். அதைச் சமாளிக்க, மன ஒப்புதல் இல்லாமல் பல பெண்கள் நைட் ஷிஃப்ட் வேலைக்கு வருகிறார்கள். இரவுப் பணியின்போது பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். செக்யூரிட்டிகூட ஆணாகத்தான் இருப்பார். அந்த நேரத்தில் ஏதாவது பிரச்னை என்றால், பகிர்ந்துகொள்ளக்கூட யாரும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் பெண்கள். பணி நெருக்கடியும் அதிகமாக இருக்கும். எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டிய சூழல் உருவாகும். அது மன அழுத்தத்தை அதிகரிக்கும். அதனால்தான், சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களின் சொந்தக் காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று சொல்லப்பட்டு, பல விஷயங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுவிடுகின்றன.’’
தற்கொலை
ஏன் இதுபோன்ற மன நெருக்கடிகள் உருவாகின்றன, எப்படிச் சமாளிப்பது? – மனநல மருத்துவர் அசோகன் விவரிக்கிறார்…
“முன்பிருந்த கட்டுப்பாடான உறவுகள் இப்போது இல்லை. நமக்குள்ளாகவே தனி தனி தீவுகளாக நாம் இருக்கிறோம். அதிலும், ஐ.டி அசோகன்ஊழியர்களுக்கு வசதிகளும் சுதந்திரமும் அதிகமாகக் கிடைத்துவிடுகிறது. அதனாலேயே அவர்கள் சக மனிதர்களிமிருந்து தனிமைப்பட்டுப் போய்விடுகிறார்கள். பழைய பண்ட மாற்று முறையின்போது ஒவ்வொரு மனிதரும் சக மனிதர்களைச் சார்ந்து வாழவேண்டியிருந்தது. அதனால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை.
அடுத்ததாக, தொழிற்சாலைகள் பெருகிவிட்ட பின்னரும்கூட கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்ததால், பெரிய பிரச்னை ஏற்படாமல் இருந்தது. ஆனால், கடந்த முப்பது வருடங்களில் நடந்த தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள், முற்றிலுமாக மனிதர்களை குடும்பத்தைவிட்டு, சக மனிதர்களைவிட்டுப் பிரித்துவிட்டன. அதிலும் ஐ.டி ஊழியர்கள் சமூகத்தைவிட்டு தனிமைப்பட்டுப் போனவர்களாகவே ஆகிவிட்டார்கள். தங்களின் சுக துக்கங்களை மனப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு ஆளில்லாமல் போய்விட்டது. நண்பர்கள், பழக்கவழக்கங்கள்கூட ஃபார்மலாகத்தான் இருக்கிறது. உண்மையாக, நெருக்கமாக யாரும் பழகுவதில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
தனிமை
ஐ.டி ஊழியர்களுக்கு, வேலை செய்யும் நிறுவனங்களிலும் ஏராளமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அதனால் உண்டாகும் மன அழுத்தத்தை அவர்கள் தனியாகவே சமாளிக்கவேண்டிய சூழல் உருவாகிறது. அதைச் சமாளிக்க, அவர்கள் நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தினமும் குடும்பத்தோடு பேச வேண்டும். தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.’’
vikatan.com

கருத்துகள் இல்லை: