ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஜாதி சான்றிதழ் .. கேரளா அரசின் தவறான அணுகுமுறை ... கமலின் அரை குறை புரிதல்கள்

AThi Asuran : கமல் தனது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி
குறிப்பிடவில்லை என்பதும் - கேரளாவில் 1.24 இலட்சம் மாணவர்கள் பள்ளியில் ஜாதியைக் குறிப்பிட வில்லை என்று கேரளாவின் கல்வி அமைச்சர் இரவீந்திரநாத் அவர்கள் சட்டசபையிலேயே தெரிவித்தார் என்பதும் உண்மைதான். இந்தச் செய்திகளில் இரண்டு தவறுகள்.
கேரளப் பள்ளிகளில், ஜாதி என்ற கட்டத்தில், தங்களது ஜாதிகளைத் தெரிவிக்காதவர்கள் 80 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். ஜாதியே இல்லாத இஸ்லாமியர்கள் எந்த ஜாதியைப் பதிவு செய்வார்கள்? அதே இஸ்லாமிய மாணவர்கள் Category என்ற கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.
Al-Hidayath English Medium School at Kondotty என்ற இஸ்லாமியப் பள்ளியின் செயலாளர் வீரன்குட்டி ஹாஜி என்பவர், தனது பள்ளியில் 921 இஸ்லாமிய மாணவர்கள் பள்ளியில் சேரும்போது ஜாதி குறிப்பிடவில்லை என்பதையும், அதே மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்ற பிரிவில் பதிவுசெய்துள்ளனர் என்பதையும் இண்டியன் எக்ஸ்ப்பிரஸ் 30.03.18 நாளேட்டில் தெரிவித்துள்ளார். இதே தகவலை, பல இஸ்லாமியப் பள்ளிகளும், இஸ்லாமிய மாணவர்களைச் சேர்த்துள்ள அரசுப் பள்ளிகளும் உறுதி செய்துள்ளன.
இதன்படி அமைச்சர் சட்டசபையில் தெரிவித்த தகவலே தவறானது என்பது ஓரிரு நாட்களிலேயே கேரள மக்களுக்குத் தெரியவந்தது.
தமிழ்நாட்டில் அண்ணாப் பல்கலைக்கழகம் பொறியியல் பட்டப்படிப்பை ஆன்லைனில் நடத்துவதையே நாம் எதிர்க்கிறோம். இணையதள வசதியோ, அதைப் பயன் படுத்தும் அறிவோ இல்லாத இலட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்க்கிறோம். கேரளாவிலோ 1 ஆம் வகுப்புச் சேர்க்கையே ஆன்லைனில் நடக்கிறது.
பள்ளி மாணவர் அனுமதிக்காக கேரளக் கல்வித்துறை உருவாக்கியுள்ள ‘சம்பூர்ணா’ என்ற மென்பொருளில், ஜாதி என்பது கட்டாயம் (Mandatory) குறிப்பிடப்பட வேண்டிய பட்டியலில் இல்லை. சமூகநீதியில் அக்கறை உள்ள அரசு என நாம் நம்பும் பினராயி விஜயன் அவர்களின் அரசு, சமூக, கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கும்?
1 ஆம் வகுப்பில் சேரும்போது ஜாதியைக் குறிப்பிடவில்லை என்பதில் ஒருரிரு சதவீதம் உண்மை இருந்தால்கூட பெருமைப்பட எதுவும் இல்லை. அதே கேரளாவில் 2016 ஆம் ஆண்டு பிறப்புச்சான்றிதழ்களில் வெறும் 222 பேர் மட்டுமே ஜாதியைக் குறிப்பிடவில்லை. மொத்தப் பிறப்பு எண்ணிக்கை 4,96,292.
தமிழ்நாட்டில் 1973 லிருந்தே பள்ளிகளில், ஜாதிப் பெயரைக் குறிப்பிட விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று ஆணை உள்ளது. அதேசமயம், மக்கள் அனைவருமே ஜாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை இங்கு இல்லை. தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே 69 சதவீத இடஒதுக்கீட்டின்படியே மாணவர் அனுமதி நடக்க வேண்டும் என்ற ஆணை உள்ளது. அந்த ஆணைதான் பின்பற்றப்படுகிறது. ஏற்கனவே, “ஜாதி ஒழிய வேண்டும் என்றால் பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதிப் பெயர் குறிப்பிடாவிட்டால் போதும்” என்ற மூடநம்பிக்கையில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில், கேரள அரசின் இந்த அணுகுமுறை தவறானது. அதைவிட, பொய்யான தகவலைப் பரப்பிய பார்ப்பனர் கமலின் பரப்புரை ஆபத்தானது. - https://timesofindia.indiatimes.com/…/articles…/63563777.cms

கருத்துகள் இல்லை: