செவ்வாய், 3 ஜூலை, 2018

ராமதாஸ் : எடப்படியின் ஆடம்பரத்துக்காக சென்னை வந்த 542 பேருந்துகள்

முதல்வருக்காக சென்னை வந்த  542 பேருந்துகள்: ராமதாஸ்மின்னம்பலம்: முதல்வரின் ஆடம்பரத்துக்குப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்திக்க வேண்டுமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவை தொடக்கவிழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று (ஜூலை 3) நடைபெறுகிறது. இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கண்டிப்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண் ஜெயலலிதாவாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்க விழா தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
விழா நடைபெறும் இடத்தில் அதிகபட்சமாக ஐந்து பேருந்துகளைக் கூட நிறுத்த முடியாது. இதற்காகச் சென்னையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பேருந்துகளை மட்டும் வைத்து இந்த விழாவைச் சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்த முடியும்.
ஆனால், தம்மை ஆண் ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீண் பகட்டு காட்டுவதற்காகவே தமிழகம் முழுவதிலும் இருந்து புதிய அரசுப் பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார். புதிய பேருந்துகளில் பெரும்பாலானவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று சுட்டிக்காட்டியிருக்கும் ராமதாஸ், இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நட்டம் பற்றியும் புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு புதிய பேருந்தும் சென்னைக்கு வந்து செல்வதற்காக குறைந்தது 400 கிலோ மீட்டர் முதல் 1,500 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு வருவதற்குப் பதிலாக அவை அவற்றுக்குரிய வழித்தடங்களில் இயக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் இரு நாட்களில் ரூ.30,000 வரை வருவாய் ஈட்டியிருக்கக்கூடும். ஆனால், வழித்தடங்களில் இயக்கப்படாமல் வீணாகச் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் அவற்றின் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இரு நாட்களில் மட்டும் குறைந்தபட்சம் ரூ.1.63 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்காக ஒவ்வொரு பேருந்தையும் அலங்காரம் செய்வதற்காக மட்டும் தலா ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.27.10 லட்சம் வீண் செலவு ஏற்படும். விழா முடிந்து பணிமனைக்குத் திரும்பும்போது கூட அவற்றில் பயணிகள் அனுமதிக்கப்படப் போவதில்லை. இவ்வாறு எந்தத் தேவையும், பயனுமின்றி முதலமைச்சரின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அரசு வளம் வீணடிக்கப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 0.13 காரணி மடங்கு கூடுதல் ஊதியம் கோரியபோது, அதை வழங்க அரசு மறுத்து விட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை.
“இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது ஒன்றுக்கும் உதவாத முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 542 பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை: