செவ்வாய், 3 ஜூலை, 2018

குகைக்குள் 9 நாள்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாய்லாந்து வீரர்கள்!,, 13 பேருக்காக களமிறங்கிய 1000 பேர் கொண்ட மீட்புக்குழு

தாய்லாந்து பிரேம் குமார் எஸ்.கே.: தாய்லாந்து நாட்டில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் குகைக்குள் வெள்ளத்தில் காணாமல் போன 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரும் தற்போது உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், கால்பந்து வீரர்களின் உறுதிக்குச் சான்றாக நடந்துள்ளது ஒரு சம்பவம். வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ளது தி தம் லுஅங் குகை. சில கிலோமீட்டர் தூரம் செல்லும் அளவுக்கு நீண்ட குகை அது. கனமழை காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கும். இதன் பாதைகள் நேராக இல்லாமலும் கரடு முரடாகவும் இருக்கும். வடக்கு தாய்லாந்துப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் இந்தக் குகைக்குள் திடீர் வெள்ளம் புகுந்தது.


தாய்லாந்து அந்நாட்டுப் பள்ளி கால்பந்து அணி வீரர்கள் (11-16 வயதுக்குட்பட்டவர்கள்) 12 பேர் கடந்த ஜூன் 23-ம் தேதி அந்தப் பகுதியில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் பங்கேற்று விட்டு தங்களது 25 வயது பயிற்சியாளருடன் குகைக்குள் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக உள்ளே தண்ணீர் புகுந்தது. கடும் வெள்ளத்தால் குகையின் வாயில் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 13 பேரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். குகை முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர், திணறினர். இதனிடையே மாணவர்களின் உறவினர்கள் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகக் குகை முன்பு தங்களின் குழந்தைகள் திரும்பி வருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். அவர்களுக்காக தாய்லாந்து முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தது.


சம்பவ இடத்துக்கு வந்த அந்நாட்டுப் பிரதமர், உறவினர்களிடம் நம்பிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அதுவே அவர்களை வெளியே கொண்டு வரும் என நம்பிக்கை அளித்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. இளம் கால்பந்து வீரர்களை மீட்க மீட்புக் குழுவுடன் அமெரிக்க ராணுவமும், குகைகளில் ஆய்வு நடத்தும் இங்கிலாந்துக் குழுவும் கடலில் உள்ளே நீந்திச் செல்லும் சீல் டைவர்ஸ் குழுவும் தண்ணீருக்கும் செல்ல முயற்சி செய்தார்கள். ஆனால், கலங்கிய சகதி தண்ணீரில் அவர்களால் கொஞ்சம்கூட முன்னேற முடியவில்லை. இதனால் உள்ளே இருப்பவர்களின் நிலை குறித்து தெரியக் காலதாமதம் ஆனது.
தாய்லாந்து
இந்நிலையில், நேற்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு சீல் டைவர்ஸ் தண்ணீருக்குள் சென்று தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயரமான ஓர் இடத்தில் இளம் வீரர்களை அவர்கள் கண்டனர். இதுதொடர்பாக தாய்லாந்து கடற்படை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்களிடம் சீல் டைவர்ஸ் உரையாடும் வீடியோ அது.
எத்தனை பேர் இங்கு இருக்கிறீர்கள்..?
13
13..? நல்லது..!
கூட்டத்தில் இருந்து ஒருவர், “எங்களை எப்போது மீட்கப் போகிறீர்கள்..?”
“இன்று இல்லை. நாங்கள் இரண்டு பேர் தான் வந்துள்ளோம். நாங்கள் சென்று மற்றவர்களை அழைத்து வரவேண்டும். நிறையபேர் வருவார்கள், உங்களை மீட்டுச் செல்வதற்கு…!” என்றார்
பின்னர் அதில் இருந்த ஒரு சிறுவன், “அவர்களிடம் நாங்கள் பசியுடன் இருப்பதைத் தெரிவியுங்கள்” என்றார். மேலும் இன்று என்ன நாள்? என்று கேட்க,
“இன்று திங்கள்கிழமை.  இது 10-வது நாள்… நீங்கள் அனைவரும் மிகவும் உறுதியானவர்கள்” என்று பதிலளிக்கின்றனர்.
மிக்க நன்றி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்..?
“இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்துள்ளோம்..! இப்போது சென்று விட்டு நாளை உங்களை மீண்டும் சந்திக்கிறோம்” என அவர்கள் விடை பெறுகின்றனர்.
தாய்லாந்து
இந்த மகிழ்ச்சியான செய்தியை அந்நாட்டு கவர்னர் உறவினர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், “அனைவரும் பத்திரமாக உள்ளனர். உங்கள் நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால், மீட்புப் பணி இன்னும் முடியவில்லை. தண்ணீருக்குள் செல்லும் திறன் கொண்ட மருத்துவர்கள் முதலில் அங்கு செல்லவுள்ளனர். அவர்கள் கடந்த 9 நாள்களாக உணவு எதுவும் உண்ணாமல் உள்ளதால், அவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உடனடியாக உள்ளே உணவுகள் அளிக்கப்படும். அதன் பின்னர் பத்திரமாக அவர்கள் மீட்கப்படுவார்கள்” என்றார். இந்தச் செய்தியை கேட்டதும் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே இதைக் கொண்டாடியது. உறவினர்கள் எதுவும் பேச முடியாமல், மகிழ்ச்சியில் அழுதனர்.
தாய்லாந்து மீட்பு குழுவினர்
இந்த மீட்புப் பணியில் தாய்லாந்து மீட்புப் பணியினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 மீட்புப் படையினர் பங்கேற்றனர்.
https://www.facebook.com/ThaiSEAL/videos/1631228493667210/?t=0
vikatan.com

கருத்துகள் இல்லை: