திங்கள், 18 ஜூன், 2018

கேஜ்ரிவால் : டெல்லியில் உள்ள ஒவ்வொரு வாக்குகளையும் பாஜகவுக்கு ஆதரவாக மாற்றுவோம்:

Arvind-Kejriwalநக்கீரன் :பாஜகவை ஆதரிக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் யூனியன் பிரதேச அந்தஸ்தால் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசால் முழு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. போலீஸ் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் டெல்லியில் முதல்வரை விட மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகமான அதிகாரம் இருந்து வருகிறது. இதனால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார்.< இந்நிலையில், டெல்லியில் சட்டப்பேரவையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்து, தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அப்போது தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது,
''டெல்லிக்கு தற்போது இருக்கும் யூனியன் பிரதேச அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால், பாஜகவை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆதரிக்கும்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும். ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்ல, டெல்லி மக்களும் ஆதரிப்பார்கள். டெல்லியில் உள்ள ஒவ்வொரு வாக்குகளையும் பாஜகவுக்கு ஆதரவாக மாற்றுவோம். அவ்வாறு செய்யாவிட்டால், டெல்லியில் வசிக்கும் மக்கள் டெல்லியில் இருந்து பாஜக செல்ல வேண்டும் என்று வாசகத்தை வைத்து எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்'' என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: