செவ்வாய், 19 ஜூன், 2018

தினகரன் - தங்கம் வெற்றிவேல் நடத்திய பஞ்சாயத்து!

மின்னம்பலம்: அதிருப்தியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நேற்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார். இன்று காலை அவர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று சொல்லப்பட்டது. தமிழ்ச்செல்வன் சந்திப்பதாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர், இன்று காலை நீதிபதி தனபாலன் இறுதி சடங்கில் பங்கேற்க சென்று விட்டனர். அதனால், தங்க தமிழ்ச்செல்வனின் சட்ட ஆலோசனை தள்ளிப்போனது. அண்ணா நகர் வீட்டை விட்டு தமிழ்ச்செல்வன் வெளியே வரவில்லை.
காலையில் 10 மணியளவில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்களும், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் தினகரன் வீட்டுக்குப் போனார்கள். ‘தங்க தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் யோசிப்பாருன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. நம்ம அணி உடைஞ்சுடுச்சுன்னு எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க...’ என்று வருத்தத்துடன் ஆரம்பித்திருக்கிறார் தினகரன்.
அதற்கு வெற்றிவேல், ‘அப்படியெல்லாம் இல்லைங்க சார். நான் காலையில் கூட தங்கத்துகிட்டப் பேசினேன். அவரு உங்களை தாண்டி எங்கேயும் போக மாட்டாரு. நேற்று சாதாரணமாக தொகுதிக்குப் போய் மக்களைப் பார்த்துட்டு வந்திருக்காரு. நீதிமன்றத்துல எதுவும் நடக்கலை என்ற கோபத்துலதான் அவரு அப்படி பேசியிருக்காரு. இப்போ நீங்க சொன்னால் கூட அவரை வரச் சொல்றேன்...’ என்று சொல்லியிருக்கிறார். ‘அவரு வர மாட்டாரு... விடுங்க... பார்த்துக்கலாம்’ என தினகரன் சொல்ல... ‘நான் பேசுறேன் சார்...’ என்று சொல்லிவிட்டு வெற்றிவேல்தான் போனை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.
தங்க தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்ட வெற்றிவேல், ‘சார் ரொம்பவும் வருத்தப்படுறாரு. நீங்க என்ன முடிவு வேண்டுமானாலும் எடுங்க. ஆனால், கிளம்பி உடனே இங்க வாங்க. எதுவாக இருந்தாலும் நாம பேசிக்கலாம்...’ என்று சொல்ல... ‘சட்டப்படி என்ன செய்யலாம்னு டிஸ்கசன் பண்ணிட்டு சாரை வந்து பார்க்கலாம்னு இருந்தேன்..’ என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்னாராம். ‘அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம். நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம். நீங்க கிளம்பி வாங்க...’ என்று வற்புறுத்த, தவிர்க்க முடியாமல்தான் கிளம்பிப் போனார் தங்க தமிழ்ச்செல்வன். தினகரன் வீட்டுக்கு வெளியே காரை விட்டு இறங்கிய தங்க தமிழ்ச்செல்வனை, வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் சிலர் வந்து உள்ளே அழைத்துச் சென்றனர். தங்க தமிழ்ச்செல்வன் உள்ளே போனதும் எல்லோரும் அமைதியாகவே இருந்திருக்கிறார்கள்.
வெற்றிவேல்தான் மௌனம் கலைத்திருக்கிறார். ‘என்ன பண்ணலாம்னு திட்டம் தங்கம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், ‘என்னண்ணே இப்படி கேட்குறீங்க.. எனக்கு எந்த திட்டமும் இல்லை. வழக்கை வாபஸ் வாங்கிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற ஐடியாவை கொடுத்ததே சார்தான். அப்புறம் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால், நான் ஒருத்தன் ராஜினாமா என்ற முடிவை எடுப்பதே எடப்பாடிக்கு பீதியை கிளப்பும். அதனால்தான் அதை செய்யுறேன்னு சொன்னேன். என் உயிர் இருக்கும் வரை நான் இங்கேதான் இருப்பேன். நான் அங்கே போய்டுவேன். அமைச்சராகிடுவேன் என்றெல்லாம் பேசுறதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியதில் இருந்து முன்ன மாதிரி ஓடி வர முடியலை. அதுக்காக நான் போய்டுவேன்னு நினைச்சுட்டீங்களா?’ என்று கேட்டாராம்.
அதற்கு தினகரன், ‘நீங்க போக மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஆனால், வெளியில் எல்லோரும் ஆளுக்கொரு விதமாக பேச ஆரம்பிச்சுட்டாங்க. உங்களை யாரும் குழப்பிடக் கூடாதுன்னுதான் நான் யோசிச்சேன். உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க. உங்க சுதந்திரத்துல நான் தலையிட மாட்டேன். எனக்கு எப்பவும் நீங்க துரோகம் செய்ய மாட்டீங்கன்னு தெரியும். எடப்பாடி பக்கம் நீங்க போயிருந்தால், அப்பவே அமைச்சராகி இருப்பீங்க. அதையெல்லாம் விட்டுட்டு நீங்க என்னோடு வந்தீங்க. உங்களை நான் நம்பாமல் இருப்பேனா? ‘ என்று உருக்கமாகப் பேசினாராம். அதன் பிறகு சுமார் ஒருமணிநேரம் ஆலோசனை நடந்திருக்கிறது. கடைசியில், ‘நாம எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கோம் என்பதை ஊருக்குச் சொல்ல வேண்டியது தமிழ்ச்செல்வன் தான். இதுல நான் வந்து பேசுறது சரியாக இருக்காது. வெளியே மீடியா வெய்ட் பண்றாங்க. தமிழ்ச்செல்வன் மட்டும் பேசட்டும். அவருக்கு என்ன தோணுதோ அதை சொல்லட்டும்...’ என்று சொன்னாராம் தினகரன்.
வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் புடை சூழ தினகரன் வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். ‘நாங்க 18 எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நான் மட்டும் என் வழக்கை வாபஸ் வாங்க போறேன். மற்ற 17 பேர் வழக்கும் அப்படியே இருக்கும். இது எங்க துணைப் பொதுச்செயலாளருக்கும் தெரியும்...’ என்று மீடியாவிடம் சொன்னார். இதை தினகரனும் வீட்டில் இருந்தபடியே டிவியில் பார்த்திருக்கிறார். அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டாராம் தினகரன்” என்று முடிந்தது

கருத்துகள் இல்லை: