சனி, 23 ஜூன், 2018

2019 தேர்தல் - யுத்தம் மட்டுமே பாஜகவின் ஒரே ஒரு தேர்தல் ஆயுதம்? காஷ்மீர் - பாகிஸ்தான் : ஹமாரா தேஷ் ஹோ..

சிவசங்கர் எஸ்.எஸ் : ஜம்மு கஷ்மீர் மாநில அரசில் பங்கேற்றிருந்த பாரதிய
ஜனதா கட்சி, அந்த அரசில் இருந்து விலகியிருக்கிறது.
அந்த விலகலுக்கு, அவர்கள் சொன்ன காரணம் தான் அபாரமானது.
அரசில் இருந்து விலகியதற்கான காரணத்தை இப்படி சொன்னார்கள், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மூத்தப் பத்திரிக்கையாளர் ஷுஜத் புஹாரி, ஸ்ரீநகரில் பட்டப்பகல் நேரத்தில் கொல்லப்பட்டது மிக கொடூரம். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதற்கு இந்த கொலையே சாட்சி. ஜம்மு, லடாக் பகுதிகள் வளர்ச்சிப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டன".
இவர்கள் சொன்ன இந்தக் காரணம் தீவிரமானது தான். அக்கறை செலுத்த வேண்டியது தான். அவசரமாக முடிவெடுக்க வேண்டிய பிரச்சினை தான். ஆனால், இது அத்தனையும் கஷ்மீரைத் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தான் பொருந்தும்.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது, மறைந்த கஷ்மீரத்து சிங்கம் 'ஷேக் அப்துல்லா' காலத்திற்கு பின் கெட்டு போனது, போனது தான். இது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால வரலாறு கொண்டது. ஏதோ இந்த மூன்று ஆண்டு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு போனது போல பா.ஜ.க அரற்றுவது, கொடுமை.

மற்ற மாநிலங்களில் காவல்துறையினர் ரோந்து வருவது போல, கஷ்மீரில் ராணுவம் தான் ரோந்து சுற்றும். துப்பாக்கி சூடு, கலவரம், கல்வீச்சு என்பது அங்கு தினப்படி சம்பவம். கடந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க அரசாங்கத்தில் பங்கேற்ற போதும், இந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறின. அதனால், ஜம்மு கஷ்மீரில் சட்டம் ஒழுங்கு ஒரு பிரச்சினை என்று சொல்வது ஏமாற்றுவித்தை.
மூத்தப் பத்திரிக்கையாளர் ஷுஜத் கொலைக்காக கண்ணீர் வடிப்பது நியாயம். ஆனால் அந்த கண்ணீர் கர்நாடக கவுரிலங்கேஷ்க்கு சிந்தவில்லையே பா.ஜ.க. மகாராஷ்டிராவில் தபோல்கர் கொல்லப்பட்ட போது இந்த எண்ணம் வரவில்லையே பா.ஜ.கவுக்கு.
மோடி எதை செய்தாலும், பா.ஜ.க எதை செய்தாலும் அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலை உற்று நோக்க வேண்டும். தவறினால், அவர்கள் கண்கட்டு விதை செய்து விடுவார்கள், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் செய்தது போல். அதனால், இந்த "ஆதரவு வாபஸ்" நடவடிக்கையையும் அப்படி தான் பார்க்க வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 28 தொகுதிகளையும், பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களையும் கைப்பற்றின. இவர்கள் கூட்டணியாக இணைந்து ஆட்சி அமைத்தனர்.
பாரதிய ஜனதா கட்சி 'ஒரே இந்தியா, இந்துத்துவா' கொள்கை கொண்டது. பி.டி.பியோ, ஜம்மு கஷ்மீரில் தனி நாடு கேட்டு போராடும் தீவிரவாதிகள் மீது அன்பு கொண்ட கட்சி என்று பார்க்கப்படுவது. பா.ஜ.க தனி நாடு கேட்போரை ஒடுக்கும் கொள்கை கொண்டது. இந்த இரண்டு கட்சிகள் கூட்டணி என்பது எலியும், தவளையும் இணைந்த கூட்டணி போன்றது.
ஒத்தக் கருத்து இல்லாவிட்டாலும், ஆட்சி அமைக்க அவர்கள் இணைந்ததற்கு காரணம், பி.டி.பியோடு வேறு யாரும் வராத நிலை. பா.ஜ.கவிற்கோ இதை விட்டால் இன்னொரு வாய்ப்பு, ஆட்சியில் பங்கேற்க கிடைக்கவே கிடைக்காது. இந்த எண்ணிக்கைக்கு மேல், பா.ஜ.கவுக்கு ஜம்மு கஷ்மீரில் கிடைக்காது. எனவே கிடைத்த வாய்ப்பை தவற விடக் கூடாது என பொருந்தாக் கூட்டணியை அமைத்தனர்.
துணை முதல்வர், அமைச்சர்கள் என்று தன் கட்சிக்காரர்களை அழகுப்படுத்திப் பார்த்தது பா.ஜ.க. நாடோடி சிறுமி அசீபா கொலையாளிகளுக்கு ஆதரவாக, இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள் ஊர்வலம் போனதில் மக்கள் எதிர்ப்பிற்கு ஆளாகி பதவி இழந்தனர். இது தான் பா.ஜ.க அமைச்சர்களின் சாதனை.
மோடியின் 'பெருமைமிகு' பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், தீவிரவாதம் குறையும் என்றார்கள். இப்போது கஷ்மீரில் அதிகரித்திருப்பதாக பா.ஜ.கவே சொல்கிறது.
அதே போல, மோடியின் "சர்ஜிகல் ஸ்ட்ரைக்" ராணுவ நடவடிக்கை தீவிரவாதத்தை ஒழிக்கும் என தம்பட்டம் அடித்தார்கள். கடைசியில் தங்கள் கூட்டணி பார்ட்னர் முதல்வர் மெஹ்பூபா மீது தான் திடீர் என 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' நடத்தியிருக்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும்.
இப்போது ஆட்சி கவிழ்ந்து விட்டது. திட்டமிட்டது போல் ஆளுநர் ஆட்சி அமல். அடுத்து, தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கை ஆரம்பம் என அறிவிப்பு வரும். 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' போல் அல்லாமல், இப்போது 'ஓப்பன் சர்ஜரி' நடக்கும்.
பதற்றம் உருவாகும். எல்லைப்புறத்தில் துப்பாக்கிச்சூடு என செய்தி வரும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக, விடியவிடிய துப்பாக்கி சண்டை நடக்கும். 'கார்கில் போர்' போல் ஒரு "டூப்ஹில்" போர் வரும். தேச உணர்வு பொங்கிப் பிரவாகிக்கும் வகையில் தூண்டப்படும். அதே சமயம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும். மைக் உடையுமளவு, "ஹமாரா தேஷ்" என்று முழங்குவார், பிரதமர் மோடி. மக்கள் நாடி, நரம்பெல்லாம் முறுக்கேறி, ஓட்டுச்சாவடி நோக்கி நடப்பார்கள்.
பிளான்லாம் பக்கா தான்...
டிமாணிடைசேஷன், ஜி.எஸ்.டி, மேக் இன் இந்தியா என எல்லாம் கைவிட்ட நிலையில் "கஷ்மீர் ஸ்ட்ரைக்" கைகொடுக்கும் என ஓர் கடைசி நம்பிக்கை.
# எதையும் பிளான் பண்ணி பண்ணனும். ஜெய்ஹிந்த் !

கருத்துகள் இல்லை: