ஞாயிறு, 17 ஜூன், 2018

கேஜ்ரிவாலைப் பார்க்கச் சென்ற 4 முதல்வர்கள்: தலைநகருக்கே இந்த கதி; மற்ற மாநிலங்கள் என்னாகும்?’

பிடிஐ THE HINDU TAMIL
அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்த முதல்வர்கள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், எச்.டி.குமாரசாமி   -  படம் உதவி: ட்விட்டர்
டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 7-நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்கச் சென்ற 4 மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தலைநகருக்கே இந்த கதி என்றால், மற்ற மாநிலங்கள் நிலைமை பாஜக ஆட்சியில் என்னாகும் என்று முதல்வர்கள் வேதனைத் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம்சாட்டுகின்றன.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.
7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள்
 இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 6 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கும் மத்திய அரசு சார்பில் எந்தவிதமான பதிலும் இல்லை.

ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், தாங்கள் எந்த வேலை நிறுத்தத்தையும் செய்யவில்லை, முதல்வர் கேஜ்ரிவால் கூறுவது தவறு என்று அவரின் குற்றச்சாட்டை மறுக்கிறார்கள்.
இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கேஜ்ரிவாலைச் சந்திக்க நேற்று மாலை சென்றனர். ஆனால், 4 மாநிலங்களுக்கும் கேஜ்ரிவாலைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், தெலங்குதேசம் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க முடிவெடுத்தனர்.
ஆனால்,இந்த 4 கட்சிகளோடு இணைந்து கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ் கட்சி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக செயல்படுகிறது. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சிக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸ் கட்சி, கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் துடிக்கிறது.
அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க முடியாது என அறிந்தபின் 4 மாநில முதல்வர்களும் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது கர்நாடக முதல்வர் எச்டி குமாரசாமி கூறுகையில், நான் கேஜ்ரிவாலைச் சந்திக்க விரும்பினேன். ஆனால், துணை நிலை ஆளுநரிடம் அனுமதி பெற்றால்தான் சந்திக்க முடியும் இல்லாவிட்டால் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர் என்று தெரிவித்தார்.

4 மாநில முதல்வர்களும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி
 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிக்கவே நாங்கள் வந்தோம். ஒரு வாரமாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் பிரதமர் மோடி தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கேஜ்ரிவாலைச் சந்திக்க வேண்டுமானால், துணை நிலை ஆளுநரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றார்கள். நாங்களும் கடிதம் அனுப்பினோம், ஆனால் துணை நிலை ஆளுநர் இல்லை என்கிறார்கள்.
தலைநகரிலேயே இப்படிப்பட்ட சம்பவம், இந்த கதி என்றால், பாஜக ஆளும் போது, மற்ற மாநிலங்களுக்கு என்ன நேரும். பிரதமர் மோடியிடம் பேசி இதற்கு நாங்கள் தீர்வு காண்போம் என்று தெரிவித்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், முதல்வர் கேஜ்ரிவால் போராட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுபோன்ற சூழல், மத்திய அரசின் அணுகுமுறை போன்றவை, கூட்டாட்சி முறையைச் சிதைத்துவிடும். இந்த மிரட்டல் என்பது டெல்லி அரசுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கானது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: