வியாழன், 21 ஜூன், 2018

சேலம் .... ராணுவ எட்டுவழி ஆக்கிரமிப்பு சாலை ! வயல்களை தோட்டங்களை அழித்து ராணுவ கட்டமைப்பு?

மின்னம்பலம் - ஆரா: சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கான ஏற்பாடுகள் இதுவரை தமிழகத்தில் எந்த சாலைத் திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பக் கருவிகளோடும், அதிகார கெடுபிடிகளோடும் நடத்தப்பட்டு வருகின்றன.
பசுமைச் சாலை என்கிற  ராணுவச்  சாலை!நிலத்தை அளக்க வரும்போதே அரசு அதிகாரிகளும், அவர்களுக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் குவிக்கப்படுகின்றனர். அங்கே எதிர்ப்புக்காக ஒரு சிறு குரல் எழுந்தால்கூட உடனடியாக அந்தக் குரலின் குரல்வளை நெரிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாகத் தங்கள் விவசாய பூமியை அனுபவித்து வரும் மக்கள் ஒரே பகலில் தூக்கித் தூர வீசப்படுகிறார்கள். கேட்டால் கைது, போலீஸ் நிலையம் என்று துன்புறுத்தப்படுகிறார்கள்.
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இப்போது இந்தக் கொடுமைகள் ஆரம்பித்துள்ளன. அடுத்து இந்தப் பசுமை எட்டு வழிச் சாலை அமையும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் போராட்டங்களும் கடுமையான ஒடுக்குமுறைகளும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏன் இந்த சாலைத் திட்டத்துக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி?
ஜூன் 11 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும்போது இந்தச் சாலை அமைக்கப்படுவதற்கான காரணங்களை விளக்கினார். முதல்வர் குறிப்பிட்ட காரணங்களைக் கவனமாக நோக்குங்கள்.

முதல்வர் சொன்ன காரணங்கள்!
“சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தற்போதுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.
தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவைவிட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாகப் போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துகள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 (Passenger Car Unit - PCU) அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் PCU லிருந்து 1 லட்சம் PCU வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.
ஆனால், இந்தப் புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவு (PCU) ஆக இருந்தாலும், இச்சாலையானது பசுமை விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் (PCU) உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் (PCU) கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்தப் பசுமை வழி விரைவு சாலையுடன் நேரடியாகப் பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக, அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாகக் கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்” என்கிறார் முதல்வர். அதாவது முதல்வர் குறிப்பிடும் முதல் காரணம் போக்குவரத்து நெரிசல் குறையும்.

தொழில் வளர்ச்சி ஏற்படுமாம்!
அடுத்து, “இந்தப் பசுமை வழி விரைவு சாலையினால், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களின் பயண தூரம், சுமார் 60 கிலோமீட்டர் வரை குறையும். இதனால், சென்னை முதல் சேலம் வரையிலான பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரம், 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆக, இவ்விரைவுச் சாலையினால் பயண நேரம் பாதியாகக் குறையும். மேலும், இந்தக் குறைவான பயண தூரத்தினால், டீசல் சேமிப்பு ஒரு வருடத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் தரமான சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்தப் பசுமை வழி விரைவுச் சாலையினால் தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் அடைவது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உயரும். தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் கனரக வாகன போக்குவரத்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றடையும். மேலும், கனரக வாகன நடை எண்ணிக்கை அதிகரிக்கும். இது தொழில் வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். காற்று மாசுபடுவது மற்றும் ஒலி மாசுபடுவது வெகுவாகக் குறையும்.
அது மட்டுமல்லாமல், இந்தப் பசுமை வழி விரைவுச் சாலையினால், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், அரூர் மற்றும் பல வட்டங்களில், தொழில் வளர்ச்சி அடைய, நிறைய வாய்ப்புகள் ஏற்படும். ஆக மொத்தம், பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும்’’ என்கிறார் முதல்வர்.
முதல்வர் சொல்லாத, பிரதமர் சொன்ன காரணம்!
பசுமைச் சாலைக்கு வக்காலத்து வாங்கி முதல்வர் சொன்ன இத்தனை காரணங்களையும் தாண்டி இந்தச் சாலை பற்றி பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொன்ன காரணம் மிக முக்கியமானது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த ராணுவக் காட்சியில் கலந்துகொள்ளக் கறுப்புக் கொடி எதிர்ப்புக்கு இடையே தமிழக தரை மீது கால்படாமல் விமானத்திலேயே வந்தாரே பிரதமர் மோடி நினைவிருக்கிறதா? அந்த விழாவில் அவர் பேசிய பேச்சைக் கொஞ்சம் பார்ப்போம்.

“தற்போது தொடங்கி இருக்கும் ராணுவத் தளவாடக் காட்சி 10வது கண்காட்சியாகும். அது மட்டுமல்ல; தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது கண்காட்சியாகும். சோழர்கள் ஆண்ட இந்தப் பகுதியில் நடைபெறும் இந்தக் காட்சியில் நீங்கள் கூடியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், 125க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
வாஜ்பாய் ஆட்சியின்போதுதான் ராணுவத் தளவாட உற்பத்தி துறையில் தனியார் பங்களிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட தளவாட உற்பத்தி குறுகிய காலத்திலேயே இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இந்தியாவின் பெருமையாகும்.
ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறி உள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவில் நாம் முன்னேறி உள்ளோம். ராணுவத் தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி நமது ராணுவம் நன்கு அறிந்துள்ளது. இன்று மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டில் ஆயுத உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் நாம் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்வதைத் தாண்டி நம்மிடம் மற்ற நாடுகள் கொள்முதல் செய்ய வேண்டும். அந்த அளவுக்குச் சிறு குறு நிறுவனங்கள் ராணுவத் தளவாட உற்பத்தியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’’ என்ற மோடி அடுத்து முக்கியமான செய்தியை அந்த விழாவில் கூறினார்.
“உத்தரப் பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் இரு ராணுவத் தளவாட தொழில் காரிடார்களை நிறுவிட நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த காரிடார்கள் (வழிப்பாதை) ராணுவம் தொடர்பான தளவாட உற்பத்தியையும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியையும் மேம்படுத்தும். இந்த வழிப் பாதைகள் ராணுவ ரீதியான தொழில் அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்’’ என்றார் பிரதமர் மோடி. அவர் குறிப்பிட்ட அந்த தமிழ்நாட்டு காரிடார்தான் இந்த எட்டு வழிச் சாலை.
உறுதி செய்த நிர்மலா சீதாராமன்
பிரதமரின் பேச்சைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுதிப்படுத்துகிறார்.
டெல்லியில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற, ’ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி: வாய்ப்புகளும், சவால்களும்' என்ற கருத்தரங்கில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் பேசியது முக்கியமானது.
“இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், பொதுத் துறை ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருந்தும், படைக்கலன் தொழிற்சாலைகளில் இருந்தும் பெறப்படுகின்றன. உள்நாட்டு தொழிற்சாலைகள் மூலமாக, பீரங்கி வண்டிகள், துப்பாக்கிகள் உள்பட எட்டு வகையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வழங்குவதில், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குப் புத்துயிரூட்ட வேண்டியது அவசியமாகும். மேலும், ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஆக்ரா, அலிகர், ஜான்ஸி, சித்ரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் நாற்கர வழித்தடம் அமைக்கப்படும். இதேபோல், தமிழ்நாட்டில் சென்னை, ஒசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் தனி வழித்தடம் அமைக்கப்படும்” என்றார் நிர்மலா சீதாராமன்.
எட்டு வழிச் சாலை என்கிற ராணுவச் சாலை!
ஏற்கெனவே தமிழகத்தின் கோவை, ஒசூர், சேலம் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இங்கே ராணுவப் பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. அந்த ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகத்தான் நிர்மலா சீதாராமன் சொன்னபடி தனி வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதுவே இந்த எட்டு வழிச் சாலை.

இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்காக நிதியை மிக அதிகமாக ஒதுக்கியிருக்கிறது. தென்னிந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தியை அதிகரிக்கவும் குறிப்பாகத் தமிழகத்தை ராணுவத் தொழில் மையமாக்கவும் மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது. அதன் அடிப்படையில்தான் ராணுவத் தளவாடங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான சாலையாக இந்த எட்டு வழிச் சாலை அமைய இருக்கிறது.
இந்தச் சாலையை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசிடம் கடுமையாகச் சொல்லியிருப்பதால்தான் தமிழக அரசும் தாறுமாறாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இது இந்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான தொலைநோக்கு கொண்ட திட்டம் என்பதால் இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
இந்தச் சாலைத் திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு கருத்துச் சொல்ல யாரும் வரக் கூடாது, எதிர்க் கருத்து வந்தால் ஊடகங்கள் பெரிதுபடுத்தும் என்பதால் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குச் சமூகச் செயற்பாட்டாளர்கள் யாரும் வரக் கூடாது என்று தேடித் தேடி போலீஸார் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு சாலைத் திட்டத்தைத் தமிழகம் சந்திப்பது இதுதான் முதன்முறை. வயல்களையும், மலைகளையும் அழித்து உருவாகப்போகும் எட்டு வழிச் சாலையில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு டிரக்குகள் பறக்கப் போகின்றன.
வயல் அரசை ஒழித்துவிட்டு வல்லரசு ஆக வேண்டாமா நாம்?

கருத்துகள் இல்லை: