திங்கள், 26 மார்ச், 2018

தலைமை ஸ்தபதி முத்தையா கைது .. பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு:

muthaiaதினமணி :பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக எழுந்துள்ள புகாரில் தலைமை ஸ்தபதி முத்தையாவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 1984-ஆம் ஆண்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில், மடாதிபதிகள், விஞ்ஞானிகள், ஆகம நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவபாஷானத்தால் ஆன மூலவர் சிலையை ஆய்வு செய்த பின்பு அளித்த பரிந்துரையின்படியே, இன்றளவும் நாளொன்றுக்கு 6 கால பூஜை மட்டுமே மூலவருக்கு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், தொன்மையான உற்சவரின் பழையசிலை அகற்றிவிட்டு புதிய உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
அவர் இறந்த பின்னர், விதிகளை மீறி 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் மேலும் ஒரு புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டுள்ளது. 
சிலையை ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல், தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிலையை பரிசோதனை செய்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர், 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அந்த சிலையில் 10 சதவீதம் தங்கம் கூட இல்லை, எள்ளவும் வெள்ளி இல்லை என்றும் சிலை ஐம்பொன்னால் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். 
இதையடுத்து சிலை செய்வதற்கு கூடுலாக 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது? அதற்கான ஆவணங்கள் எங்கே?, ஒரு வேளை சில ஆண்டுகளுக்குப் பின் அதை வெளிநாட்டுக்கு கடத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.
உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை செய்வதில் கையாடல் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பழனி கோயில் நிர்வாகி கே.கே.ராஜா என்ற மற்றொருவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது.

கருத்துகள் இல்லை: