வியாழன், 29 மார்ச், 2018

ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுமாலைமலர் :மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை இணைமந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இழப்புகளை ஈடு செய்யும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே அந்த முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை கொண்ட ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் விமானப் போக்குவரத்துத்துறையும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து அதன் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

கருத்துகள் இல்லை: