சனி, 13 ஜனவரி, 2018

கலைஞர் தொண்டர்களை சந்திக்கிறார் .. பொங்கலை முன்னிட்டு ..

tamilthehindu :திமுக தலைவர் கலைஞர்  நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கவிருக்கிறார்.
15 மாதங்களுக்குப் பிறகு அவர் தொண்டர்களை சந்திக்கவிருப்பதால் திமுகவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உடல்நலம் குன்றியபின் கலைஞர்  முழு ஓய்வில் இருந்து வருகிறார். அண்மையில் அவர் முரசொலி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அதன்பின்னர் அண்ணா அறிவாலயத்துக்கு ஒருமுறை வந்தார். சமீப காலமாக பிரதமர் மோடி தொடங்கி அரசியல் தலைவர்கள் பலரும் கலைஞரை  நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த்கூட திமுக தலைவர் கலைஞரை  நேரில் சென்று சந்தித்தார். கலைஞரின்  உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவரும் நிலையில், நாளை (தை முதல் நாள்) கலைஞர்  தொண்டர்களை சந்திக்கவிருக்கிறார். காலை 11 மணிக்கு அவர் தொண்டர்களை சந்திக்கிறார்.
தொண்டர்களை சந்திப்பதை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கலைஞர்  பூரண நலத்துடன் இருந்த காலகட்டங்களில் பொங்கல் பண்டிகையன்று தன்னை சந்திக்க வருபவர்களுக்கு புதிய ரூ.10 நோட்டு தருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை தொண்டர்களுக்கு புதிய ரூ.50 நோட்டு வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 மாதங்களுக்குப் பிறகு நாளை தொண்டர்களை சந்திக்கவிருக்கும் நிலையில், தொண்டர்கள் யாரும் பூங்கொத்து கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: