திங்கள், 8 ஜனவரி, 2018

மலேசியக் கலை விழா...அதிர்ச்சியில் ரஜினி, கமல்! ..காலரியின் 90 சதவீத பகுதிகள் வெறிச்சோடிக்...


மின்னம்பலம் :இராமானுஜம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
வழக்கம்போல நடிகர்கள் அஜீத், விஜய், சிம்பு, சந்தானம், ஜெய் உட்பட சிலர் கலந்து கொள்ளவில்லை. நட்சத்திரக் கலை விழாஆடல் பாடல் தொடங் குவதற்கு முன்னதாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
விழா நடந்த புக்கிஜாலி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் இருக்கை வசதி உள்ளது. ஆனால், கிரிக்கெட் போட்டிகளின்போது பெரும்பாலான கேலரிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது.
ரஜினி, கமல் இருவரும் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த பிறகு ஒன்றாக கலந்துகொள்ளும் முதல் சினிமா விழா என்பதால் கண்டிப்பாக அரசியல் ஏதாவது பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல, பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி விழா நடத்துவது என்பதால் விழா அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.

அதிர்ச்சியில் ரஜினி, கமல்!
இதன் காரணமாகவே ரஜினி, கமல் இருவரையும் விழா அரங்கிற்கு அழைத்து வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இருவரும் அந்த மைதானத்திற்கு சொகுசு ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் வந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தபடி மைதானத்தில் இறங்கிய போது பார்வையாளர் அமரும் காலரியின் 90 சதவீத பகுதிகள் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டதைக் கண்டு இருவருமே கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், விழா நடத்தியவர்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியிருந்தது. அதோடு, ஆடல் பாடலுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த கதாநாயகிகள் வரப்போவதில்லை என்பது முன்கூட்டியே மலேசிய ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. இதன் காரணமாக டிக்கட் விற்பனை மந்தமாகிவிட்டது.
சாதாரணமாக ஒரு நிறுவனம் விருது வழங்கும் விழாவோ அல்லது கலை நிகழ்ச்சியோ நடத்தினால் எந்த அளவுக்கு நிகழ்ச்சிகள் இருக்குமோ அந்தளவுக்குக்கூட நிகழ்ச்சிகளின் தரம் இல்லை என்கின்றனர் நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்துச் சென்று திரும்பிய மலேசிய ரசிகர் கூட்டம்.

மொத்தத்தில் நிகழ்ச்சி பெரும் சொதப்பலில் முடிந்தாலும் நடிகர் சங்கம் எதிர்பார்த்ததை விட அதிகத் தொலைக்கு விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதன் முதல் படியாகச் சென்னையில் உள்ள பிரமாண்டமான துணிக்கடை நிறுவனம் (சரவணா ஸ்டோர்) விழா மேடையிலேயே இரண்டரை கோடி ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்தது.
அந்தக் காசோலையை ரஜினியும் கமலும் இணைந்து வந்து வாங்கிக்கொண்டார்கள்.
இது தவிர அந்த துணிக்கடை நிறுவனம்தான் நடிகர் சங்க நிர்வாகிகளின் போக்குவரத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டது.
ஏராளமான விளம்பர நிறுவனங்கள் பெருமளவு நிதி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றன. சில நிறுவனங்கள் பணமும் அளித்திருக்கின்றன. பல நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
எதிர்பார்த்த பணம் வருமா?
நட்சத்திர கிரிக்கெட் போட்டியையும், நட்சத்திரக் கலை நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை ஒரு தனியார் சேனல் பெருந்தொகைக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது.
ஆனால், கலை நிகழ்ச்சிகளில் பெரும் சொதப்பல். பெரிய அளவில் ஆடல் பாடல் இல்லாததால் போட்ட ஒப்பந்தத்தின்படி அந்த தனியார் சேனல் பேசிய பணத்தைக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் தற்போது நடிகர் சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டிருக்கின்றதாம்.
மலேசியாவில் கால் வைத்த நிமிடத்தில் இருந்து விழா முடியும்வரை நடிகர் சங்கச் செயலாளர் விஷால் கடும் டென்ஷனிலேயே இருந்ததாக அவரோடு பயணித்தவர்களே கூறுகின்றனர்.

நிகழ்ச்சியை நடத்த பொறுப்பேற்றுக் கொண்ட நிறுவனம் சென்னையிலிருந்து புறப்பட்டுப் போய் மலேசியாவில் இறங்கிய சங்க உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்குமே சொன்னபடி அங்கே எந்த வசதிகளும் செய்து தரவில்லையாம். இதுதான் இந்த டென்ஷனுக்குக் காரணம்.
இதற்கு முன்பு நடிகர் சங்கம் பெரும் கடனில் இருந்தபோது அப்போது விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது அவர் தலைமையில் இதேபோல ஒரு நட்சத்திரக் கலை விழாவை மலேசியாவில் நடத்தி நிதி திரட்டினார்.
அப்போது விழா அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது, எதிர்பார்த்ததை விட நிதி திரண்டு நடிகர் சங்கக் கடனையும் விஜயகாந்த் அடைத்து சங்கத்தில் நிதியை மிச்சம் வைத்தார்.

இப்போது நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தனது நிர்வாகம் இருக்கும்போதே நடிகர் சங்கத்தைக் கட்டி அதிலிருந்து ஒரு பெரும் வருமானத்தை நிரந்தரமாகக் கிடைக்குமாறு செய்துவிட வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கிறார்.
நிகழ்சியின் வீடியோ எவ்வளவு நேரம், அது ஒளிபரப்புக்குச் சரியாக வருமா என்பதைப் பார்த்த பின்னரே தனியார் தொலைக்காட்சி தான் ஒப்புக்கொண்ட தொகையைத் தருமா அல்லது குறைக்கப்போகிறதா என்பது தெரியும். அதன் பின்னரே நடிகர் சங்கத்தில் அதிரடி சரவெடிகள் இருக்கலாம் என்கிறது நடிகர் வட்டாரம்.
இந்த நட்சத்திரக் கலை விழாவின் வெற்றி, தோல்வி என்பது தற்போதைய நிர்வாகிகளின், குறிப்பாக விஷாலின் வெற்றி, தோல்வியாகவே பார்க்கப்ப்டும் என்பதால் இதன் லாப நஷ்டங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
படங்கள்: சன் டி.வி ட்விட்டர்

கருத்துகள் இல்லை: