திங்கள், 8 ஜனவரி, 2018

சென்னை ஐஐடி ஆய்வகத்தைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்துவிடுகிறது.

ஆய்வகத்தைப் பார்வைக்கு விடும் சென்னை ஐஐடி!
மின்னம்பலம் : முதன்முறையாக சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) அதன் ஆய்வகத்தைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்துவிடுகிறது.
1959ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஆய்வகம் மாணவர்களின் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக ஆராய்ச்சியாளர்களுடன் இந்த ஆய்வகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், சென்னை ஐஐடி சனிக்கிழமைகளில் பார்வையாளர்களுக்கு ஆய்வகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது. இது தற்போது நடைபெற்றுவரும் சஸ்த்ரா 2018 தொழில்நுட்ப விழாவின் ஒரு பகுதியாகும். சென்னை ஐ.ஐ.டியின் மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் வெளிக்காட்டும் வகையில், ஆண்டுதோறும் சஸ்த்ரா தொழில்நுட்ப விழா, கொண்டாடப்படுகிறது.

இது உலக ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் எப்போதும் திறந்திருக்கிற ஒரு வீடாகும். வருடாவருடம் 40,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களைக்கொண்டு ஆசியாவில் நடைபெறும் மிகப் பெரிய கல்லூரிகளுக்கிடையேயான விழாக்களில் சஸ்த்ராவும் ஒன்றாகும். இது உலகில் மாணவர்களைக்கொண்டு நடத்தப்படும் நிகழ்வாகும் மற்றும் ஐஓஎஸ் சான்றிதழ் பெறும் நிகழ்வாகும். 21 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தாண்டு புதிதாக ஸ்பாட்லைட் விரிவுரை நடக்கவிருக்கிறது என டீன் எம்.எஸ்.சிவகுமார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: