திங்கள், 8 ஜனவரி, 2018

148-வது சீட்டில் பேரவையில் தனி ஒருவராக அமர்ந்திருக்கும் தினகரன் ! சிங்கம் சிங்கிளாகவோ ?

தினகரன்
தினகரன்விகடன் :அஷ்வினி சிவலிங்கம் :தலைமைச் செயலகத்தில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய சட்டப்பேரவையில், இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பின், டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், தமிழக ஆளுநராகப் பதவியேற்றப்பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது. தினகரன் சட்டப்பேரவைக்கு வந்தபோது, வெளியே அவரது தொண்டர்கள் ’வருங்கால முதல்வர், நாளைமுதல்வர் வாழ்க’ என்று கோஷங்களை எழுப்பினர். நான்காம் கேட் வழியாக தினகரன் உள்ளே சென்றார். அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி மற்றும்  விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ., கலைச்செல்வன் ஆகியோரின் அருகில் தினகரன் அமர்ந்தார். தி.மு.க-வை சேர்ந்த நேரு, தினகரனுக்கு வாழ்த்து கூறினார். தினகரன், 148-வது சீட்டில் அமர்ந்துகொண்டார். தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவைக் காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படாததால், எதிர்க்கட்சி வரிசையில் தினகரன் தனி ஒருவராக அமர்ந்திருந்தார்.

கருத்துகள் இல்லை: