செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

குஜராத் மாநிலங்கள் அவை தேர்தல் ... மத்திய அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்தை முற்றுகை ...

புதுடில்லி: மிகுந்த பரபரப்புடன் குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று நடந்து முடிந்தாலும் ஓட்டு எண்ணிக்கை தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் காங்., பா.ஜ.வினர் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.
இதையடுத்து காங். சார்பில் பிரதிநிதிகளும், பா.ஜ. சார்பில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ரவிசங்கர்பிரசாத், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரும் டில்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை தாமதம்
குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபாவுக்கு பா.ஜ. சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோரும், காங். சார்பில் அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர்.. இதில் அகமது பட்டேலை தோற்கடிக்க பா.ஜ. வியூகம் வகுத்தது. இதன்படி காங். எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பா.ஜ.விற்கு தாவினர்.
காங். வேட்பாளரான அகமது பட்டேல் வெற்றி பெற 46 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால் எஞ்சியுள்ள இக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு கடத்திச்செல்லப்பட்டு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர்.

பின்னர் இவர்கள் இன்று தேர்தலில் ஓட்டளித்தனர். அப்போது இரு காங். எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் பதிவு செய்த ஓட்டுச்சீட்டை பா.ஜ.தலைவர்களிடம் காண்பித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும் ஓட்டு எண்ணிக்கை தாமதம் ஆனது.இது தொடர்பாக காங்.தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. .அதில் எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டளித்ததை செல்லாது என அறிவிக்க வேண்டும் என காங். வலியுறுத்தியது. இதற்கு பா.ஜ. எதிர்ப்பு தெரிவித்தது.
குவிந்த மத்திய அமைச்சர்கள்

இது தொடர்பாக டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று இரவு பஞ்சாயத்து துவங்கியது. இதில் காங். சார்பில் ஆனந்த்ஷர்மா, ரன்தீப் சூரஜ்வாலா, சிதம்பரம் உள்ளிட்டேரும், , பா.ஜ. சார்பில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன்,பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, ஆகியோரும் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு குவிந்தனர்.
தேர்தல் ஆணையர் இவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது ஓட்டு எண்ணிக்கை தாமதமாகியுள்ளதால், இரு கட்சிகளும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் பரபரப்புடன் காணப்படுகிறது. தினமலர்

கருத்துகள் இல்லை: