திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அதிமுக ..தினகரனின் பேச்சை இனி தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் கேட்கலாம்! .!

எஸ்.கிருபாகரன் டி.டி.வி தினகரன்
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதிமுக என்கிற அசுரக்கட்சியைப் பலவீனப்படுத்த தினகரன் தலைமையில் அதிகாரப் பூர்வமாக 3 வது அணி உருவாகிவிட்டது. கருணாநிதி என்ற பலம் வாய்ந்த தலைவரை பகைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் 1972 ம் ஆண்டு துவக்கிய கட்சி அதிமுக. ரத்தச்சிவப்பிலான சைரன் பொருத்தப்பட்ட காரில் அமைச்சர்கள் இன்று பந்தாவாக வலம்வர அன்று தங்கள் சொந்த ரத்தத்தையே இழந்தவர்கள் பலர். கட்சியைத் துவக்கிய 6 மாதங்களில் திண்டுக்கல் பாராளுமன்றத்தேர்தல் வெற்றி, அடுத்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரியணை என மக்களின் அபிமானத்தால் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்தார் எம்.ஜி.ஆர். இறக்கும்வரை அவர் முதல்வராகவே இருந்து மறைந்தார்.> எம்.ஜி.ஆரின் இறுதிக்காலத்தில் ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் இருவருக்கிடையே கட்சியில் உருவான  பூசல், அவரது மறைவுக்குப்பின் உச்சகட்டத்திற்குப் போனது. இதனால் எம்.ஜி.ஆர் மறைந்து ஒரு மாதத்திற்குள் அதிகாரத்தை இழந்தது அக்கட்சி.  பூசலின் உச்சகட்டமாக ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமையில் இரு அணிகளாக கட்சி உடைந்தது. அடுத்துவந்த தேர்தல் முடிவுகள் ஜானகியிடம் மனமாற்றத்தினை ஏற்படுத்த கட்சியை கவுரவமாக ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு ராமாவரம் தோட்டத்திற்குள் தன்னை முடக்கிக்கொண்டார். ஜெயலலிதாவின் கையில் ஒருங்கிணைந்த அதிமுக வந்தபின் எம்.ஜி.ஆரைவிடவும் சர்வாதிகாரமான போக்கை அவர் கையாண்டார். கட்சியில் யார் வளர்வதையும் அவர் விரும்பவில்லை. வளர்ந்தவர்களை தட்டிவைத்தார். தளர்ந்தவர்களை தட்டிக்கொடுத்தார். யாரும் அதிகார மையமாக உருவாவதை அவர் தடுத்தபடியே இருந்தார்.
இறுதிநாளில் போஸ்டர்களில் தன் படத்தைத் தவிர யார் படமும் இடம்பெறக்கூடாது என அறிக்கை வெளியிடும் அளவுக்கு அவர் சென்றார்.
எரியும் விளக்கின் கீழ் இருள் இருப்பதுபோல் வெளியே யாரும் தலையெடுத்துவிடாமல் பார்த்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவின் வீட்டுக்குள்ளேயே இன்னொரு அதிகார மையம் வளர்ந்துகொண்டிருந்தது. பசிக்கு தின்பதாக அவர் நினைத்துக்கொண்டிருந்த  நட்புகள், தன் பதவியையே ருசிபார்க்க விரும்புவார்கள் என அவர் நினைத்திருக்கமாட்டார். ஒருநாள் அதுதான் நடந்தது. உளவுத்துறை அறிக்கை சொன்ன ஒருநாளில் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றினார் என்றாலும் 3 மாதம் கூட அவரால் பிரிந்து இருக்கமுடியவில்லை தோழியை.
எம்.ஜி.ஆர்- ஜானகி -ஜெயலலிதா
போயஸ் வீட்டிலிருந்தே மன்னிப்புக் கடிதம் அனுப்பப்பட்டு கையெழுத்தை மட்டும் போட்டுக்கொடுத்து உள்ளே வந்தார் சசிகலா. அந்தக் கையெழுத்துதான் தமிழகத்தின் அடுத்த பல வருடங்களின் தலையெழுத்தானது.
ஜெயலலிதா தலைமைச் செயலகத்திலிருந்தபடி ஆண்டுகொண்டிருந்தபோது, சசிகலா போயஸ் தோட்டத்தில் புன்னகைத்தபடி புகார் மனு பெற்றுக்கொண்டிருந்தார். நகத்தை நசுக்கும் முயற்சியில் இறங்கிய ஜெயலலிதாவின் விரல்தான் நசுங்கியது. நகம் வளர்ந்துகொண்டே இருந்தது. எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா மரணம் நிகழ்ந்தபோது ராஜாஜி ஹாலில் அவரது உடலைச்சுற்றி நின்றபடி, இனி தமிழகம் என்றால் அது நாங்கள்தான் என சசிகலா குடும்பத்தினர் மக்களுக்கு புரியவைத்தார்கள். அண்ணன் மகள் கூட அங்கு 5 நிமிடங்களுக்கு மேல் நிற்கமுடியவில்லை. அடுத்தடுத்து காட்சிகள் அரங்கேறின. ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டார். மருந்து மாத்திரை எடுத்துதந்தந்தற்காக ஒரு மாநிலத்தையே கேட்டார் சசிகலா.
சசிகலாவின் முயற்சியை டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை. நாசூக்காக சொல்லியும் புரிந்துகொள்ளாமல் பல்கலைக்கழக மண்டபத்தை தயார் செய்யச் சொன்னவரை, பலமாகக் குட்டி பரப்பன அக்ரஹாராவுக்கு அனுப்பிவைத்தது மத்திய அரசு. சொத்துக்குவிப்பு வழக்கில் விபரீதமாக ஏதேனும் நடந்தால் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி மொத்த எம்.எல்.ஏக்களையும் கூவத்துார் அழைத்துச் சென்றவர்கள், எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சியின்போது செங்கோட்டையனின் பையைத் துாக்கிக்கொண்டு திரிந்த எடப்பாடியை எதிர்பாராதவிதமாக தேர்ந்தெடுத்தார்கள்.
பேருந்தில் கர்ச்சீஃப் போட்டு இருக்கையை உறுதிசெய்வதுபோல் தினகரனை தன் பொறுப்பில் அமரவைத்துவிட்டு சிறை சென்றார் சசிகலா. முதல்வரானாலும் கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது ‘அண்ணன் இருக்கிறாரா’ என்று கேட்டுத்தான் துணைப்பொதுச்செயலாளர் அறைக்குள் நுழைய முடிந்தது எடப்பாடியினால். வந்தவரை தினகரன், அமர்ந்தபடியே கைகொடுத்து அமரச்சொன்னபோதுதான் சீனியர் செங்கோட்டையனின் துயரம் எடப்பாடிக்கு புரிந்திருக்கும். காரணம், 1989 ல் சேவல் அணியில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுடன் முதன்முறையாக சட்டமன்றத்தில் எடப்பாடி நுழைந்தநாளில் நடராஜனுடன் சட்டமன்றத்தை சுற்றிப்பார்க்க வந்த இளைஞன் தினகரன்.
தினகரனின் நடவடிக்கையால் காயப்பட்ட எடப்பாடி கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கினார். எடப்பாடி அரசியல்வாதிதான். அதேசமயம் அவர் மோடியைப்போன்று கார்பரேட் ஆட்களுடன் வணிகத்தொடர்பு கொண்டவர். அதனால் ஸ்திரமாக ஓர் முடிவுக்கு வந்தார் என்கிறார்கள்.
சசிகலா
3 முறை முதல்வராக இருந்தபோதும் எப்போதும் முதல்வருக்கான சிறப்பு அறையை தலைமைச் செயலகத்தில் ஏற்படுத்திக்கொள்ளாதவர் ஓ.பி.எஸ். ஆனால் எடப்பாடி, முதல்முறையே அம்மாவின் அறையை மராமத்து செய்யச் சொன்னது தினகரனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். 60 நாட்கள் வரைக்கூட ஓ.பி.எஸ்ஸை அனுசரித்துச்செல்ல முடியாதவர்கள் தன்னை எத்தனை நாட்களுக்கு விட்டுவைப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததால் எடப்பாடியிடம் மாற்றம் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது.
ஓ.பி.எஸ்ஸின் எந்தக் கோரிக்கையையும் ஏறெடுத்துப்பார்க்காதவர், முதன்முறையாக கட்சி அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்களை அகற்றும் கோரிக்கைக்கு செவிமடுத்தார். தன் முடிவை அத்தனை நாசூக்காக சசிகலா தரப்புக்கு தெரிவித்தார் இந்த விஷயத்தில். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறை சென்றது, நல்ல வாய்ப்பாப்பாகிவிட்டது. மத்திய அரசு சசிகலா குடும்பத்தினர் மீது கொண்ட வெறுப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தத்துவங்கினார் எடப்பாடி.
“ஒதுங்கியிருங்கள், ஓ.பி.எஸ்ஸை வளைத்தபின் வாருங்கள்” என தினகரனுக்கு 60 நாட்கள் வனவாசம் அளித்துவிட்டு அந்த நாட்களில் தன்னை ஸ்திரமாக்கிக்கொண்டது, எடப்பாடி அணி. சசிகலா தரப்புக்கு தன் நிலைப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக புரியவைத்தார் எடப்பாடி.
அதன்பின்னர்தான் கட்சியின் லகான் தன்னிடம் ‘கழற்றி’க்கொடுக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தார். தன் ஆதரவாளர்களுடன் கலந்துபேசினார். ‘மோடியின் ஆசி இல்லாததால் அதிகாரத்தின் அருகில் வரமுடியவில்லை. ஆசை ஆசையாய் சொத்துசேர்த்துவிட்டு அதிகாரத்தை துறந்துவிட்டும் ஓடிவிடவும் முடியவில்லை. புலி வாலைப்பிடித்த கதையாகிவிட்டது தினகரன் நிலை. “ 60 நாட்கள் முடிந்து கட்சி அலுவலகத்திற்கு வருவேன் என எல்லாரும் ஒண்ணா இருக்கனும் இல்லேன்னா…” என சிறுபிள்ளைத்தனமாக சொன்னபோதே தினகரனின் அரசியல் பக்குவம் பல் இளித்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி
இருதலைக்கொள்ளி எறும்பாய்த்தான் இப்போது தன் புது ஆட்டத்தை துவங்கியிருக்கிறார் தினகரன். இருக்கிற பிரச்னைகளை முடித்துக்கொண்டு ஏதோவொரு நாட்டுக்கு விமானம் ஏறிவிட நினைத்தவரை அவரது நண்பர்கள் விடாமல் அதிகாரத்தை நோக்கித் தள்ளிவிடுகிறார்கள் இப்போது.
“ பாதி எம்.எல்.ஏக்கள் மேல் சின்னம்மாவால் பதவிக்கு வந்தவர்கள்தான். மீதம் உள்ளவர்களுக்கு உங்களை விடவும் செலவு செய்ய எடப்பாடியால் முடியாது. துணிச்சலாக இறங்குங்கள் களத்தில்” என அவர்கள் ஓதிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் வந்த முதல் பிறந்தநாளின்போது தினகரனின் காருக்காக கட்சி அலுவலகத்தின் வாசலிலேயே வந்து காத்திருந்தவர் எடப்பாடி. மணமகனை மணமேடைக்கு அழைத்துவருவதுபோல் அன்று எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் தினகரனை மேடைக்கு அழைத்துவந்தார்கள். விழா முடிந்து கிளம்பும்போது காரின் கண்ணாடியை ஏற்றும் வரை அவர்கள் காத்திருந்து அனுப்பிவைத்தனர். இன்று இதே தலைமை அலுவலகத்திற்கு தான் செல்லப்போகிற தகவலை தினகரன், பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது அவரது அரசியல் பரிதாபம். ஆனால் இது கட்சியின் மனநிலையைக் கணிக்க அவர் போட்ட திட்டம்தான் என்கிறார்கள்.
ஆனால் 5ந்தேதிக்கு அலுவலகம் வருவேன் என அவர் தெரிவித்த தகவலுக்கு எடப்படி தரப்பிடமிருந்து வந்த ரெஸ்பான்ஸ் அதிர்ச்சிகரமானது. அப்படி ஒன்று நடந்தால் 88 ல் நடந்த ஒரு கலவரத்தை அதிமுகதலைமைக் கழகம் கண்டிருக்கும் என்கிறார்கள். மாநில அதிகாரம் மட்டுமின்றி மத்திய அரசின் கடைக்கண்பார்வையிலும் எடப்பாடி அரசு இருப்பதால் பிரச்னை எப்படி திசைதிரும்பினாலும் அது தனக்கு எதிராகவே முடிந்துவிடக்கூடும் என்பதால், அதில் முற்றாக பின்வாங்கியிருக்கிறார் இப்போது. அதேசமயம் சசிகலா (சிறையில் சந்தித்தபோது) உள்ளிட்ட தனக்கு நெருக்கமான பலருடன் கடந்த 10 நாட்களாக மிகத் தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தினகரன்.
தினகரன்
“எடப்பாடிக்கு பயந்து நீங்கள் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தால் அதிகார பலம் இல்லாத உங்களை மத்திய அரசு எளிதாக குறிவைப்பார்கள். நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதனால் அரசியல் களத்தில் நீங்கள் தொடர்ந்து இயங்கவேண்டியது அவசியம்” என எச்சரித்தார்களாம் அவருக்கு நெருங்கிய வட்டாரம்.
இனி தனி ஆவர்த்தனம் செய்து கட்சியை கைப்பற்றுவதுதான் ஒரே வழி என அவர்கள் யோசனை சொல்லியிருக்கிறார்கள். “கட்சி நம்மிடம் இருந்தால் ஆட்சி நம்முடையதாக இருக்கும். தொண்டர்கள் மத்தியில் இன்னமும் ஓ.பி.எஸ், எடப்பாடி என்பதே பிரதானமாகிவருகிறது. அதனால் கட்சிக்குள் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டுவோம். தனி அணி என அடையாளம் காணப்பட்டால் அதிருப்தியாளர்களை திரட்டமுடியும். அதிருப்தியாளர்களை திரட்டி கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்குவோம். பின்னர் ஜெயலலிதா போல் அசைக்கமுடியாத தலைவராக இருக்கலாம்.” என அவர்கள் சொன்ன யோசனையை கேட்டுக்கொண்டாராம் தினகரன்.
“கட்சியும் நிர்வாகிகளும் மாறிக்கொண்டே இருப்பார்கள் . அதிமுகவைப்பொருத்தவரை தொண்டர்கள்தான் அதன் பலம். அதனால் அவர்களிடம் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவோம். அதற்கு ஒரு தலைவருக்குரிய தகுதியோடு மக்களை சந்திக்கவேண்டும். நீங்கள் அமரவைத்த ஓ.பி.எஸ் மக்களிடம் தலைலராக அந்தஸ்து பெற்றிருக்கிறார். கட்சியில் இத்தனை பலமாக இருந்த உங்களால் முடியாதா” என அவர்கள் தெரிவித்தனராம்.
தினகரன்சசிகலா குடும்பத்தினரில் எல்லோருக்குள்ளும் ஒருவித புரிதல் இருக்கும். ஆனால் தினகரன் இதில் தனிரகம். யாரிடமும் ஒட்டாத ரகம். அவரது குணம் சசிகலாவைத்தவிர யாருக்கும் பிடிக்காது. தினகரனைத் தவிர்த்து தன் குடும்பத்தில் வேறு யாருக்காவது பொறுப்பை சசிகலா வழங்கியிருந்தால் கட்சி, சசிகலா சிறை சென்ற நான்காவது நாளே காணாமல் போயிருக்கும். அத்தனை மூர்க்கமானவர் தினகரன் என்கிறார்கள்.
இறுதியாக மகாதேவன் மரணத்திற்கு மாலை எடுத்துச் சென்றவரை அங்கிருந்த எம்.நடராஜன் “அப்படியே இன்னொரு மாலைக்கும் இப்பவே சொல்லிவெச்சிடுப்பா அது நான்தான்” என மனம் கசந்து சொன்னாராம். அப்படி ஒரு நட்பைத்தான் இதுவரை தினகரன் உறவினர்களிடம் பேணிவருகிறார். இதை தவிர்க்கச்சொல்லி சசிகலா சிறை சந்திப்பில் அறிவுறுத்தினாராம்.
இதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் தினகரன்மாமியார் இறந்த துக்க நிகழ்ச்சியில் திவாகரனுடன் சகஜமாக உரையாடியது என்கிறார்கள். அடுத்தடுத்து உறவினர்களிடம் சகஜமான ஒரு உறவைத் தொடர முடிவு செய்திருக்கிறாராம் தினகரன்.
“மக்களை சந்திப்போம். எம்.ஜி.ஆர் பாணியிலேயே மக்களைக் கவரும் விஷயங்களில் கவனம் செலுத்தி, மக்களைக் கவரும்விதமாக பேசி அவர்களிடம் ஒருவித பிணைப்பை உருவாக்குவோம். பிறகு நாம் நினைத்ததை சாதிக்கலாம்” என நண்பர்கள் அழுத்தமாக சொன்னதையடுத்துதான் இப்போது அதற்கான ஆயத்தப்பணிகளைத்துவக்கியிருக்கிறார் தினகரன் என்கிறார்கள்.
முதற்கட்டமாக இப்போது தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியில் தன் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை அள்ளிவழங்கியுள்ளார். இதுதான்  எடப்பாடி அணியுடன் அவர் மேற்கொள்ளும் முதல்போர். இப்போது எடப்பாடி அணியிடம் இருந்து தாக்குதல் வந்தால் அதை தனக்கு சாதகமாக்கி நியாயம் கேட்பது அடுத்தகட்டத் திட்டம். கட்சியில் இருந்துகொண்டு கலகக்குரல் எழுப்பியபடி பரபரப்பு அரசியல் செய்வது, மத்திய அரசில் எதிர்காலத்தில் மோடியின் அதிகாரத்தில் சறுக்கல் ஏதேனும் ஏற்படும்போது தீவிரமாக கட்சியில் தன்னை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபடுவது…இப்படி விறுவிறுவென களத்தில் இறங்கி விளையாட தயாராகிவிட்டார் தினகரன் என்கிறார்கள்.
இதற்கு அச்சாரமாக தினகரன் இப்போது தன் ஆதரவாளர்கள் மூலம் கட்சியின் முந்தைய வரலாறுகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறாராம். எம்.ஜி.ஆர் மக்களை கவர்ந்த விதங்களை எல்லாம் தனக்கு நெருக்கமாக உள்ள மூத்த நிர்வாகிகளிடம் கூர்ந்து கேட்டுக்கொள்கிறாராம். அவரது ஆதரவாளர்கள் எல்லா பதிப்பகங்களையும் தேடிப்போய் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அதிமுக தொடர்பான புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். மக்களை சந்திக்கும் தன் முதல் சுற்றுப்பயணத்திட்டத்தில் கூட எம்.ஜி.ஆருக்கு ராசியான இடமான  மதுரை மேலுாரையே முதல் இடமாக தேர்வு செய்திருக்கிறார்.
மக்களை உணர்ச்சிவயப்பட வைக்கும் தினகரனின் பேச்சை இனி தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் கேட்கலாம்! 
vikatan.com

கருத்துகள் இல்லை: