ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

150 வருடங்களில் வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் செல்லும் தேயிலை - திலகராஜ் மலையக எம் பி

namathumalayagam.com: இலங்கையில் தேயிலை உற்பத்தி முதல் ஏற்றுமதி வரையான செயன் முறையில் பங்கேற்கும் நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான பார்வையினூடாக தேயிலைத் தொழில் துறையானது எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஓரளவுக்கு அறிந்துக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. இலங்கையில் 150 வருடகால தேயிலை உற்பத்திக் கைத்தொழிலின் பின்னணியிலேயே ரயில் போக்குவரத்து, வங்கித்துறை, பங்குசந்தை வரையான பல்வேறு பொருளாதார அம்சங்கள் வலுப்பறெத் தொடங்கின எனும் விடயத்தை  கடந்த அத்தியாங்களில் பார்த்தோம். தொழிற்படை அடிப்படையில் அதிகளவான சனத்தொகையை ஒரே துறையில் கொண்டிருந்த துறையாகவும் தேயிலையே காணப்பட்டது. இந்த நூற்றியைம்பது கால வரலாற்றில்  தேயிலைத் தொழில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கு அப்பால் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது என்பதுதான் இன்றைய போக்காகக் காணப்படுகின்றது. அதேநேரம் இதே பெருந்தோட்டத் துறைக்குள் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக ஒரு தொழில் துறையாக உள்நுழைந்ததே முள்ளுத்தேங்காய்  (Palm Oil) கைத்தொழில். முள்ளுத் தேங்காய்த் தலையங்கத்துடன் தொடராக வெளிவரும் இந்த கட்டுரைகளில் முள்ளுத்தேங்காய்  தவிர்ந்த பெருந்தோட்டத் துறையில் பயிரிடப்படும் ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டு வந்ததே எவ்வாறு பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுவந்த, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிர்காலத்திலும் தாக்கத்தை செலுத்தப்போகின்றது என்பதற்கான ஒரு  முன்னோட்டமாகத்தான்.


;இலங்கை ஒரு விவசாய நாடு என்கின்ற வகையில் நாட்டிலே இடம்பெற்று வந்திருக்க கூடிய நெற்செய்கை உள்ளிட்ட மரக்கறிகள் வரையான விவசாய உற்பத்திப் பொருட்கள் வாசனைத்திரவிய உற்பத்தி அனைத்துமே விவசாயிகளால் தமது நிலத்தில் சொந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அவற்றை மேம்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் அமையப்பெற்றன. விவசாயத்திணைக்களம், கமத்தொழில் சேவைத் திணைக்களம் போன்றன குறிப்பிட்ட  துறைகளை ஊக்குவிப்பதற்கான அரச பொறுப்பு நிறுவனங்களாக அமைந்தன.பிரித்தானியர்களின் வெளியேற்றத்துடன் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டார்கள் என்கிற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்நியராகவந்த தொழிலாளர்கள் வெளியேறவில்லை என்கிற மனநிலை அவர்களிடம் இருந்தது. 

அதனால்தான் சுதந்திரம் அடைத்த அதே வருடத்தில் இலங்கை குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறித்தெடுத்தது. அந்த நாள் வரை கணக்கெடுத்தாலே தேயிலைக் கைத்தொழில் ஆரம்பித்த நாளில் இருந்து இந்திய தொழிலாளர் மக்கள் இலங்கை நாட்டில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருந்தனர்.இத்தகைய தொலைநோக்குத் திட்டத்தின் இன்றைய விளைவு பெருந்தோட்டக் கைத்தொழிலில் நிறுவன ரீதியாக செயற்படும் நிறவனங்களில் தொழிலாளர் எண்ணிக்கை  ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேராகவும் சிறுதோட்ட உடமையாளர்கள் நான்கு இலட்சமாகவும் மாறியிருப்பதாகும். தொடர்ந்தும் நாட் சம்பளத்துக்காகப் போராடும் கூலித் தொழிலாளர்களான ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேரில் 99 சதவீதமானோர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களாக இருக்க சிறுதோட்ட உடமையாளர்கள் எனப்படும் நான்கு இலட்சம் பேரில் 99 சதவீதமானவர்கள் சிங்கள மக்கள் என்பதுதான் பெருந்தோட்டக் கைத்தொழிலில் ஏற்பட்டிருக்கூடிய மாற்றம்.

இது எப்போது எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதை மேற்சொன்ன வரலாற்று  அம்சங்களோடு ஒப்பிட்டு அறியலாம். இந்த செயற்பாடுகளின் விளைவாக இன்று தேயிலை ஏற்றுமதியில் 70 சதவீதமானவை சிறுதோட்ட உடமையாளர்களிடம் இருந்தும் 30 சதவீதமானவையே பெருந்தோட்டங்களிலும் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே பெருந்தோட்டங்களின் நிலையில் நின்று பார்க்கின்றபோது 150 வருட காலத்தில் தேயிலையின் வீழ்ச்சிப்போக்கு என்பது தெட்டத்தெளிவு. எனவே பெருந்தோட்டக் கம்பனிகள் தாம் நட்டம் அடைகின்றோம் என சொல்வதும், தேயிலை மலைகள் காடாவதும், பெருந்தோட்டத் தேயிலைத் தொழிலை விட்டு மலையகத் தமிழ் மக்கள் வேகமாக விலகிச் செல்வதும் தற்செயல் நிகழ்வல்ல.தென்னைக் கைத்தொழில் ஏற்கனவே பெருந்தோட்டக் கட்டமைப்பில் இருந்து விலகி சிறுதோட்ட உடமையாக மாற்றபட்டுவிட்ட நிலையில் தேயிலை, ரப்பர் கைத்தொழில்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டம் சார்ந்து கைவிடப்பட்டு சிறுதோட்ட உடமைக்குள் கொண்டு செல்லப்படுவதும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறைநோக்கி முள்ளுத்தேங்காய் உற்பத்திக் கைத்தொழில் உள் நுழைக்கப்படுவதும் அவதானத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாகின்றன

கருத்துகள் இல்லை: