செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

முரசொலி பவள விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு .. அண்ணன் பிடி கொடுக்கலையாம்!

 “முரசொலி பவள விழா கொண்டாட்டத்துக்குத் தயாரானபடியே இருக்கிறது திமுக. ‘என் முதல் குழந்தை முரசொலி’ என திமுக தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார். அந்தக் குழந்தைக்குப் பவள விழா என்பதால் ரொம்பவே ஸ்பெஷலாக நடத்த வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார்.
இந்தச் சமயத்தில் முரசொலி ஆசிரியர் செல்வம் ஸ்டாலினிடம் பேசி இருக்கிறார். அப்போது, ‘ஆரம்ப காலத்துல அழகிரியை தலைவர் மதுரைக்கு அனுப்பியபோது, மதுரையில் முரசொலியோட வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் அழகிரிதான். அதுவும் சைக்கிளில் மதுரையைச் சுற்றி வந்து பல இடங்களுக்கு ஏஜெண்ட்களை நியமித்தது அவர்தான். அதனால் அவரையும் இந்த விழாவுக்கு கூப்பிட்டா நல்லா இருக்கும். அப்புறம், தலைவர் எமர்ஜென்சி காலத்தில் நெருக்கடிக்கு மத்தியில் அண்ணாசாலையில் முரசொலி பேப்பரை விநியோகித்தபோது அவரோடு இருந்தது தமிழரசுதான். அதனால, இந்த ரெண்டு பேருக்கும் அழைப்பு கொடுக்கணும்னு நினைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் யோசித்த ஸ்டாலின், பிறகு முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனரான உதயநிதியிடம் சொல்லி அழகிரியை அழைக்கச் சொல்லியிருக்கிறார்.

உதயநிதியும் உடனே உற்சாகமாகி அழகிரிக்கு போன் போட்டாராம். பல முறை உதயநிதி அழைத்தும் அழகிரி போனை எடுக்கவில்லை. அழகிரியின் மகன் தயாநிதிக்கு போன் போட்டபோதும், அவரும் போனை எடுக்கவில்லை. இந்த தகவலை உதயநிதி உடனே ஸ்டாலினுக்கும் சொல்லிவிட்டார்.
ஸ்டாலின் தரப்பிலிருந்து, முரசொலி செல்வத்துக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. செல்வம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அழகிரியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘நான் எதுக்கு அங்கே வரணும்? அழைப்பிதழை பார்த்தேன். அதுல என் பெயரே இல்லை. இப்போ நான் வந்தால் அது சரியா இருக்காது’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. ஆனாலும், பெரியப்பாவை எப்படியாவது விழாவுக்கு அழைத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார் உதயநிதி. என்னதான் சமாதானம் பேசினாலும் அழகிரி வருவது சந்தேகமே என்கிறார்கள். தமிழரசு வீட்டுக்கு ஸ்டாலின் நேராகவே சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“அழகிரி விஷயத்தில் எப்போதும் கறாராக இருக்கும் ஸ்டாலின் இப்போது இறங்கி வர என்ன காரணம்?’’ என்று கேட்டது வாட்ஸ் அப்.
பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக். “இது முரசொலி பவள விழா. அழகிரி மீது வருத்தங்கள் இருந்தாலும் அவருடைய பங்களிப்பும் முரசொலியில் இருந்தது என்று செல்வம் சொன்னதை யோசித்துதான் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் ஸ்டாலின் குடும்பத்தில் இருக்கும் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லையாம். ‘இப்போதான் எந்த பிரச்னையும் இல்லாமல் போயிட்டு இருக்கு. அவரை எதுக்கு கூப்பிட்டு நாமே வம்பை விலை கொடுத்து வாங்கணும்’ என்று சொல்லி இருக்கிறார்கள். ‘விழாவுக்கு கூப்பிடுவதால என்ன வந்துடப் போகுது. வருவாரு.. வந்துட்டு போகட்டும். அதனால எதுவும் ஆகாது..’ என்று ஸ்டாலின் சொன்னாராம். ஒருவேளை ஸ்டாலினே கடைசி நேரத்தில் அழகிரியைத் தொடர்பு கொண்டு பேசினால் அவர் விழாவுக்கு வந்தாலும் வரலாம் என்று சொல்பவர்களும் உண்டு” என்று முடிந்தது அந்த பதில். அதற்கு லைக் போட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: