சனி, 7 மே, 2016

கலவரம் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

சென்னை : ''பா.ம.க., துாண்டுதலால், திருமாவளவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், கலவரம் வெடிக்கும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், கொருக்குப்பேட்டையில், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் வசந்திதேவியை ஆதரித்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: வெள்ளம் வந்தபோது, வேற்று கிரகவாசி போல் இருந்து விட்டு, அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, ஆர்.கே.நகர் பகுதிக்கு வந்து சென்றார் ஜெயலலிதா. சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஜெயலலிதா தலையின் மீது, கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது.குன்காவின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், ஜெயலலிதா சிறை செல்வது நிச்சயம். அப்படி சிறை சென்றால், தேர்தலில் போட்டியிட முடியாது; அத்துடன் அவரின், அரசியல் சாம்ராஜ்யமே அழிந்து போகும்.


கருணாநிதியின் குடும்பம், 1.76 லட்சம் கோடி ரூபாய், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது. தாமரைக்குப்பத்தில் தேர்தல் பிரசாரம் செய்து திரும்பிய, திருமாவளவன் கார் மீது, நான்கு பேர் கும்பல், கல் வீசி தாக்கியுள்ளது. பா.ம.க.,வின் துாண்டுதலால், தாக்குதல் நடந்துள்ளது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், கலவரம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: