செவ்வாய், 3 மே, 2016

காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் வெற்றி......புதிய கருத்துகணிப்பு ....உம்மன் சாண்டி செகண்ட் ரவுண்ட் ..

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 16–ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி, எதிர் கட்சியான கம்யூனிஸ்டு கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி ஆகியவை இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கவும் கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பாரதிய ஜனதா கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்று கேரள அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுக்கவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.
இதுவரை இல்லாத அளவு இந்த தேர்தலில் அனைத்து கட்சிகள் சார்பிலும் சினிமா நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். எனவே கேரள சட்டசபை தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
கேரள சட்டசபை தேர்தல் முடிவு பற்றி இதுவரை பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. அவைகளில் கம்யூனிஸ்டு கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ் இன்டகிரேட்டர் கம்யூனிக்கேஷனுக்காக மார்ஸ் என்ற அமைப்பு இந்த கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது.
கேரள மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் பேரிடம் இந்த அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தியதில் 45 சதவீதம் பேர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 43 சதவீதம் பேரும் 12 சதவீதம் பேர் பாரதிய ஜனதா மற்றும் இதர கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
69 முதல் 73 இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் 67 முதல் 69 இடங்கள் வரை கம்யூனிஸ்டு கூட்டணி கைப்பற்றும் என்றும் பாரதிய ஜனதா மற்றும் இதர கட்சிகளுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஆளும் காங்கிரஸ் அரசு மீது சோலார் பேனல் மோசடி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சரிதாநாயரின் பாலியல் புகார்கள் அந்த கட்சிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பூரண மதுவிலக்கை மாநிலத்தில் உறுதியுடன் அமல்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உம்மன்சாண்டியின் இமேஜ் கணிசமாக உயர்ந்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான மக்கள் கருத்துக்கணிப்பில் கூறி உள்ளனர்.
கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் ஓரிரு இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: