வெள்ளி, 6 மே, 2016

கோயில் அன்னதான திட்டத்தை நிறுத்த திமுக திட்டம் : ஜெயலலிதா

பெருந்துறை,மே 06 (டி.என்.எஸ்) கோயில்களில் நடைபெறும் அன்னதான திட்டத்தை நிறுத்த, திமுக திட்டமிட்டுள்ளது, என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று பெருந்துறையில் நடைபெற்ற பிரசாரா கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கு அறிஞர் அண்ணா உணவகம் மூலம் உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்து ஏமாற்றப் பார்க்கின்றனர். இந்தத் திட்டம் இந்து சமய அறநிலையத் துறை, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும் என திமுக தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத் திருக்கோயில்களில் நடக்கும் அன்னதான திட்டத்தை நிறுத்திவிட்டு, அதே நிதியைக் கொண்டு ஒரு வேளை உணவு வழங்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அம்மா உணவகம் மூடப்பட்டு, விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதுதான் திமுகவின் குறிக்கோள்.
திமுகவில் உள்ள பலர் மினரல் வாட்டர் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதனால்தான், அம்மா குடிநீர் விற்பனைக்கு திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக அரசு செயல்படுத்தி வரும் குறைந்த விலையில் சிமெண்ட், தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை போன்ற திட்டங்கள் குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை. குறைந்த விலையில் சிமெண்ட், மருந்துகளை மக்களுக்கு வழங்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. திமுகவுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, உங்கள் நலனுக்கு வைக்கப்படும் வேட்டு.
இவ்வாறு அவர் பேசினார்.  //tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: