வெள்ளி, 6 மே, 2016

கந்து வட்டி இந்தியன் வங்கி ... கம்யுனிஸ்ட் மகேந்திரனின் வீடு ஜப்தி? மல்லியா ,அதானின்னா கொடுப்பாய்ங்க கேக்கவும் மாட்டாய்ங்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் வீட்டை ஜப்தி செய்வதாக வந்த அறிவிப்பால் ஆடிப்போயிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். 'கல்விக்கடனை செலுத்தவில்லை' எனக் காரணம் சொல்கிறது இந்தியன் வங்கி. இந்தியன் வங்கியில் தன்னுடைய மகளின் கல்விக்காக, 11 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார் சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன். மேற்கு மாம்பலத்தில் உள்ள தன்னுடைய வீட்டை லோன் பெறும்போது கணக்குக் காட்டினார். கடந்த மூன்று மாதங்களாக வங்கிக் கடனை அவரால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, அவரது வீட்டை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நிர்வாகம் நேற்று அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. இதனால் வேதனையில் ஆழ்ந்திருக்கிறார் மகேந்திரன்.


மகேந்திரனிடம் பேசினோம். " என் மகள் பயோடெக் படிப்பதற்காக இந்தியன் வங்கியில் கல்விக்கடன் வாங்கியிருந்தேன். வங்கி எனக்குக் கொடுத்த 11 லட்சத்தில், இதுவரையில் 15 லட்ச ரூபாய் வரையில்  கட்டிவிட்டோம். அதுவும் என் மகள் வேலைக்குப் போய்த்தான் கட்டுகிறார். 'இன்னும் 8 லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது' என வங்கி நிர்வாகம் சொல்கிறது. என் மகளின் நிறுவனத்தில் வேலை நேரம் குறைக்கப்பட்டதால், போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால், வங்கிக் கடனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மூன்று மாதமாக தவணை கட்டாததால் பிரச்னை வரும் எனக் கருதி, கடந்த மாதம் அறுபதாயிரம் ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு வந்தார். இதையும் மீறி வீட்டை ஜப்தி செய்வதாக, வங்கி அதிகாரிகள் கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. வாங்கிய கடனுக்கு மேல் பல லட்ச ரூபாயைக் கட்டிவிட்டோம். அதையும் தாண்டி இன்னமும் வட்டி கட்ட வேண்டும் எனச் சொல்கின்றனர். கந்துவட்டியைவிட மோசமாக இருக்கிறது இந்தியன் வங்கியின் செயல்பாடுகள். வீட்டைக் காப்பாற்ற சட்டரீதியாகப் போராட இருக்கிறேன். கடனை அடைப்பதற்கு சில தோழர்களின் உதவியை நாடியுள்ளேன்" என்றார் ஆதங்கத்தோடு.  விகடன்.com

கருத்துகள் இல்லை: