புதன், 20 ஜூன், 2012

பங்குச் சந்தை உள்பேர வர்த்தகம் (Inside Trading) என்றால் என்ன?

பங்குச் சந்தையில் உள்பேர வர்த்தக மோசடி" (Inside Trading) என்ற வார்த்தை அண்மைக்காலமாக அடிக்கடி உங்கள் பார்வைக்குப் படுகிறது அல்லவா? அதென்ன "உள்பேர வர்த்தகம்" என்ற கேள்வி இயல்பாக எழத்தான் செய்யும்!
ஒரே வரியில் சொல்வது என்றால், பங்குச் சந்தையில் வெளியிடப்படாத விலை மதிப்புகளை முன்கூட்டியே ரகசியமாக தெரிந்து கொண்டு அந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பது மற்றும் பங்குச் சந்தை தொடர்பான அதிமுக்கிய தகவல்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் ஆதாயம் அடைவது என்று சொல்லலாம்..
இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லலாம்..
நீங்க ஒரு நிறுவனத்தை நடத்துறீங்க.. உங்க நிறுவனமும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இருக்கிறது.. உங்கள் நிறுவனத்தின் பங்கு மதிப்புகளின் விலையை நீங்கள் சந்தையில் வெளியிடுவதற்கு முன்பாகவே உங்க பக்கத்திலேயே இருக்கின்ற ஒரு நபர் மற்றொருவருக்கு ரகசியமாக சொல்லிவிடுவார்.. அந்த நபரோ, இந்த நிறுவனத்தோட மதிப்பு இதுதான் என்று நீங்கள் சந்தையில் பங்கு மதிப்பை வெளியிடும் முன்பே தகவலை விற்று அதன் மூலம் ஆதாயம் அடைந்து கொள்வார்.. இதுதான் உள்பேர வர்த்தகம் என்பது... இப்படிச் செய்வது சட்டவிரோதம் என்கிறது செபியின் 1992-வது சட்டம்..
பங்குச் சந்தையில் மதிப்புகள் வெளியான பிறகு அதை பகிரங்கப்படுத்துவது, முதலீடு செய்வது என்பதெல்லாமே சட்ட விரோதம் இல்லை.
யாரெல்லாம் உள்பேர வர்த்தகத்தில் தொடர்புடையவர்கள்?
முந்தைய பத்தியில் குறிப்பிட்டதைப் போல உங்கள் நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பவரோ அல்லது பங்கு மதிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சாத்தியம் உடையவர்தான் உள்பேர வர்த்தகத்தில் ஈடுபடக் கூடியவராக இருக்க முடியும்.
அதாவது பங்குவர்த்தக தரகர்கள், நிறுவன முதலீடு தொடர்பாக ஆலோசனைகளை வழங்கக் கூடியவர், நிறுவனப் பணியாளர், பங்கு மதிப்புகளை பதிவு செய்யக் கூடியவர் இப்படி சந்தையில் உங்களது நிறுவன மதிப்பு வெளியாவதற்கு முன்பு யாருக்கெல்லாம் மதிப்பு தெரிய வாய்ப்பிருக்கிறதோ அவர்கள் அனைவருமே உள்பேர வர்த்தகத்தில் ஈடுபடக் கூடிய வாய்ப்புள்ளவர்கள் என்றே கூறலாம்.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல் என்பது என்ன?
பங்குச் சந்தையின் மதிப்புகளை மட்டுமே தெரிந்து கொள்வதுடன் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அதாவது Price Sensitive Information என்ற தகவலையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு ஆதாயம் அடைவதும் உள்பேர வர்த்தகத்தில் அடக்கம்.
உங்கள் நிறுவனத்தின் கணக்கு முடிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அந்த விவரங்களை பங்குச் சந்தையோடு தொடர்புடையவர்களிடம் தெரிவித்து ஆதாயம் அடைவது, பங்கு விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளுதல், உங்கள் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் அல்லது விரிவாக்கப் பணிகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அந்த தகவலை விற்று ஆதாயம் அடைதல், நீங்கள் வேறு ஒரு நிறுவனத்தை வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதையும் அறிந்து கொண்டு காசாக்குவது என பங்குச் சந்தையோடு தொடர்புடைய உங்களின் அனைத்து நிறுவன நடவடிக்கையுமே அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்களாகவே கருதப்படுகிறது.
தண்டனை
உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளரோ, அல்லது நிர்வாக இயக்குநர்களில் ஒருவரோ இந்த மாதிரி தகவல்களை ரகசியமாக விற்று ஆதாயம் அடைந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். அந்த நபரது கணக்குகளை முடக்கலாம், அவரை பணியிடை நீக்கம் செய்யலாம்., பங்கு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கையிலிருந்து அவரை விலக்கி வைக்கலாம்.

கருத்துகள் இல்லை: