செவ்வாய், 19 ஜூன், 2012

போட்டியிலிருந்து பி.ஏ.சங்மாவும் விலகல்?குடியரசுத் தலைவர் தேர்தல்

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் சார்பில் முன்னிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் அனேகமாக போட்டியிலிருந்து விலகிக் கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி தமது அரசியல் சாணக்கியத்தனம் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார். எப்படியும் போட்டியின்றி குடியரசுத் தலைவராகிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் பிரணாப் முகர்ஜி முதல் கட்டமாக எதிர் முகாமில் இருக்கும் சிவசேனாவின் ஆதரவைப் பெற்றிருக்கிறார். எதியூரப்பா கோஷ்டியின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் ஏற்கெனவே பிரணாப்பை ஆதரிக்கும் மூடில்தான் இருக்கிறார்.

இந்நிலையில் சங்மா முகாமை தொடர்பு கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜி, போட்டியிலிருந்து விலகிவிடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார். சங்மாவின் மகள் அகதா, மத்திய அமைச்சராக இருக்கும் நிலையில் பிரணாப்பை எதிர்த்து களம் இறங்குவது சரியாக இருக்காது என்றும் என்னதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவில்லை என்று சமாளித்துக் கூறினாலும் சரிப்பட்டு வராது என்றும் நெருக்கடி கொடுத்து வருவதாகத் தெரிகிறது.
அவர் சார்ந்திருக்கும் தேசியவாத காங்கிரஸூம் எப்படியும் சங்மா போட்டியிலிருந்து விலகிவிடுவார் என்று கூறிவரும் நிலையில் பிரணாப் மூலமான காங்கிரஸின் நெருக்கடியால் அவர் எந்த நேரத்திலும் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும் என்றே கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: