வெள்ளி, 22 ஜூன், 2012

மதபோதகர் மகன் கைது பாலியல் தொல்லை, கருணை இல்லத்தில்

சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார்.

இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.


இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அனைத்து  மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவி யை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சக மாணவிகளுடன் கருணை இல்லத்தில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த நிர்வாகியின் மகன் ஜானி தன்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அடிக்கடி இது போல் தொல்லை கொடுப்பதால் அங்கு தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் வெளியே வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: