செவ்வாய், 19 ஜூன், 2012

ஜெயா சசி சொத்து குவித்த வழக்கில் மீண்டும் சசி கட் அடித்தார்


ஜெயலலிதா வழக்கு: இளவரசியிடம் ‘இனிக்க இனிக்க’ பேசிய ஆசாமி யார்?

Viruvirupu

இதுபோன்ற ஒரு தமாஷ், தமிழகத்தில்தான் நடக்கும். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் காரணமாக, வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் உள்ளே போடப்பட்டார் (அவர் ஒன்றும் காந்தி அல்ல என்பது வேறு விஷயம்). தமிழகத்தில் உத்தரவிட்ட முதல்வர் மீது, பக்கத்து மாநிலம் கர்நாடகாவில் வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கு நடக்கிறது. அதன் விசாரணைக்கு அவர் ‘கட்’ அடித்து கடிதம் அனுப்புகிறார்.

பாவம் வீரபாண்டியார், “இப்ப பிசியா இருக்கேன். அப்புறமா பாக்கலாம்” என்று லீவ் லெட்டர் கொடுக்க முடியாதபடி, அவர் ஏற்கனவே உள்ளேதான் உள்ளார்!
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, வெற்றிகரமாக மற்றொரு தடவை, மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. காரணம், மெயின் குற்றவாளியில் இருந்து, செகன்டரி குற்றவாளிகள் வரை அனைவருமே லீவு லெட்டர் அனுப்பிவிட்டு, சென்னையில் இருந்து விட்டார்கள்.
சொத்து குவித்தது எப்படி என்ற கேள்விகளுக்கு ஜெயலலிதா, ஏற்கனவே பதில் கூறி முடித்து விட்டார். அவரால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் கந்தசாமி மனு கொடுத்தார். அதை நீதிபதி மல்லிகார்ஜுனய்யா ஏற்றுக்கொண்டார். ஆனால், அவருடன் சேர்த்து குற்றவாளிகள் பட்டியலில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேர் சார்பிலும் லீவு லெட்டர் கொடுத்தபோது, நீதிபதி பொங்கி எழுந்துவிட்டார்.
இந்த மூவரும் கோர்ட்டுக்கு வரமுடியாமல் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளதாம்?
சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், “சின்னம்மா கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் 10 நாட்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் வரவில்லை” என்று சிரிக்காமல், சீரியசாக கூறினார். அவருக்காவது ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். ஆனால் பாவம், நம்ம சுதாகரனுக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாம்! இளவரசிக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாம்.
சுதாகரன் மற்றும் இளவரசியின் வக்கீல்கள், முதுகுவலி, நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கான மருத்துவ சான்றிதழை கோர்ட்டில் கொடுத்தனர்.
சுதாகரன் கொஞ்ச நாட்களாக கழுத்தில் தேர் வடம் சைசிஸ் தங்க செயின் போட்டுக்கொண்டு திரிந்தார். அந்தப் பாரத்தில் முதுகு வலி ஏற்பட்டிருக்கலாம். கோர்ட்டுக்கு வருவதென்றால் பிரஸ்டீஜ் காரணமாக மீண்டும் செயின் போடவேண்டி இருக்கும். முதுகுவலி ஜாஸ்தியாகிவிடும்.
இளவரசியின் நீரிழிவு நோய்க்கு பெங்களூரு ஏன் ஒத்துக் கொள்ளாது என்பது சரியாக தெரியவில்லை. ஒருவேளை கோர்ட்டில் அவருடன் நீதிபதியும், அரசு வக்கீலும், ‘இனிக்க இனிக்க’ பேசுகிறார்களோ, என்னவோ! நீரிழிவு நோய்க்கு இனிப்பு கண்ணில் காட்டக் கூடாது!
லீவு லெட்டர்களை கண்டு நீதிபதி பொங்கியெழுந்தாலும், அவரால் வேறு என்ன செய்துவிட முடியும்? சிவனே என்று லீவு லெட்டர்களை வாங்கி வைத்துக்கொண்டு, வழமை போல எச்சரிக்கை விடுத்தார். “சொத்து குவிப்பு வழக்கை தினமும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், கடுமையான உத்தரவு பிறப்பிக்கும் நிலை வரும்” என்று கூறினார்.
அந்த நிலை, எப்போது வரும் என்று அவர் கூறவில்லை.
பின்னர், விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, “25-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். சட்டத்தின் 313வது பிரிவின் கீழ் வாக்குமூலம் கொடுப்பதற்கு சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தயாராக வர வேண்டும்” என்று மூவருடைய வக்கீல்களிடமும் கூறினார்.
நீதிபதியின் நிலைமையை பரிதாபம் பொங்க பார்த்த வக்கீல்கள், “சரிங்க ஐயா. உங்களுடைய லேட்டஸ்ட் எச்சரிக்கையையும், சசி அன்ட் கோவிடம் தெரிவிக்கிறோம். நீங்க உடம்பை பாத்துங்குங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். ஜெயா சசி சொத்து குவித்த வழக்கில் மீண்டும் சசி கட் அடித்தார் 

கருத்துகள் இல்லை: