வியாழன், 21 ஜூன், 2012

அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேறு வழியின்றி சங்மாவை ஆதரிக்கும் பாஜக!

 Nda May Back Sangma President
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு செய்ய இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டையில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று கூறிவருகிறது. இரு கட்சிகளையும் பாஜக் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சமாதானப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவையும் பாஜக கோரி வருகிறது.

சங்மாவை பாஜக ஆர்வத்துடன் ஆதரிக்கவில்லை. அப்துல் கலாம் போட்டியிலிருந்து விலகியதால் வேறு வழியின்றியே அவரை ஆதரிக்கிறது. மேலும் சங்மாவை ஆதரித்தால் ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக்கின் ஆதரவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுவிட முடியும் என்ற நப்பாசை காரணமாகவும் சங்மாவை பாஜக ஆதரிக்கிறது.
சங்மா வெற்றி பெறாவிட்டாலும் கூட பழைய கூட்டணிக் கட்சிகளான அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளத்தை மீண்டும் தங்கள் அணியில் இடம்பெறச் செய்வதற்கான வாய்ப்பாக பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலை கருதுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று சங்மாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் சந்தித்து அவருக்கு பாஜக ஆதரவு கிடைக்கும் என்று தகவல் தெரிவித்தார். மேலும் அத்வானியில் இல்லத்தில் அவரை பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த் சிங், சுதீந்திர குல்கர்னி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து குல்கர்னி மட்டும் தனியாக சென்று சங்மாவை சந்தித்தார். அப்போது பாஜகவின் ஆதரவை அவர் உறுதி செய்ததாகக் தெரிகிறது

கருத்துகள் இல்லை: