திங்கள், 5 டிசம்பர், 2011

NTR லட்சுமி பார்வதியை வெளியேற்றினார் என்டிஆர் ராமகிருஷ்ணா


Lakshmi Parvathi
ஹைதராபாத்: மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்த தனது சித்தி லட்சுமி பார்வதியை, என்.டி.ஆரின் மகன் ராமகிருஷ்ணா அதிரடியாக வெளியேற்றி விட்டார்.

என்.டி.ஆர். கடைசிக்காலத்தில் லட்சுமி பார்வதியை மணமுடித்துக் கொண்டார். இதற்கு என்டிஆர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மருமகன் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கட்சியையும் கைப்பற்றி, ஆட்சியையும் பிடித்துக் கொண்டார்.
அன்று முதல் இன்று வரை லட்சுமி பார்வதிக்கும், நாயுடு மற்றும் என்டிஆர் குடும்பத்துக்கும் ஆகாது. அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.என்.டி.ஆருக்குச் சொந்தமான பங்களா ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது. அங்குதான் கடைசிக்காலத்தில் லட்சுமி பார்வதியுடன் ராமராவ் தங்கியிருந்தார். என்டிஆர் மறைவுக்குப் பின்னரும அந்த வீட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்தார் லட்சுமி பார்வதி.

அதேசமயம், இந்த வீட்டை தனது மகள் உமாமகேஸ்வரி பெயருக்கு என்டிஆர் உயில் எழுதி வைத்திருந்தார்.இதையடுத்து லட்சுமி பார்வதியை காலி செய்யும்படி என்டிஆர் குடும்பத்தினர் கூறி வந்தனர். ஆனால் அவர் காலி செய்யவில்லை. இதையடுத்து என்டிஆர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த கோர்ட் டிசம்பர் 15ம்தேதிக்குள் காலி செய்யுமாறு லட்சுமி பார்வதிக்கு உத்தரவிட்டது. ஆனால் அப்படியும் அவர் காலி செய்யவில்லை. இதையடுத்து உமா மகேஸ்வரி சார்பில் அவரது அண்ணன் என்டிஆர் ராமகிருஷ்ணா போலீஸாரின் உதவியுடன் அதிரடியாக வீட்டுக்குச் சென்று வீட்டை மீட்டார். லட்சுமி பார்வதியை வெளியேற்றினார்.

இதையடுத்து பிலிம்சிட்டி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் தனது மகனுடன் குடியேறினார் லட்சுமி பார்வதி. இந்த வீடு லட்சுமி பார்வதியின் மகன் கோடீஸ்வரரா ராவுக்குச் சொந்தமானதாகும்.

பழி வாங்கும் வகையில் என்டிஆர் குடும்பத்தினர் இவ்வாறு நடந்துள்ளதாக லட்சுமி பார்வதி குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: