ஞாயிறு, 4 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!




முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.
மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.
இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.
அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.
அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.
இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.
தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.
அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.
இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
படத்தை பாருங்கள், பரப்புங்கள்!

கருத்துகள் இல்லை: