புதன், 7 டிசம்பர், 2011

இருளர் பெண்களை பலாத்காரம் செய்த போலீஸாரை கைது செய்யாதது ஏன்?- உயர்நீதிமன்றம் கண்டனம்

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய போலீசாரை இதுவரை கைது செய்யாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மண்டபம் என்ற ஊரில் இருளர் குடியிருப்பில் வசித்த நான்கு இளம் பெண்களை திருக்கோவிலூர் போலீசார் பத்து தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இருளர் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய போலீசார் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அந்த பெண்களை உடனடியாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டனர். இந்த வழக்கில் 2 வாரத்தில் அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: