வெள்ளி, 1 ஜூலை, 2011

சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்?: சிபிஐ சந்தேகம்

முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.சாதிக் பாட்சாவின் மரணம் தொடர்பான வழக்கை தமிழக போலீசிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி சிபிஐ ஏற்றது.சென்னையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தற்போது தங்களது சந்தேகங்களை உறுதிசெய்ய சாதிக் பாட்சாவின் உள் உறுப்புகள் மற்றும் இதர ரசாயன ஆய்வு முடிவுகளுக்காக சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.பாட்சாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் டெக்காலின் அறிக்கையில் இருந்து தாங்கள் கண்டறிந்தவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.சாதிக் பாட்சா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மார்ச் 17-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்திவந்த நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் சாதிக் பாட்சாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: