வெள்ளி, 1 ஜூலை, 2011

உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்

சென்னை: "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:

* தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அதிகரித்து விட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?

இக்குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார். தி.மு.க., 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசின் மொத்தக் கடன் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். அதுதான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 22.29 சதவீதம் கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க., ஆட்சியில், 19.58 சதவீதம்தான் கடன் இருந்தது. இது போன்ற நிதிப் பிரச்னைகளில் குற்றம் சாட்டும்போது, நிதித்துறை செயலர் போன்ற அதிகாரிகளை கலந்து, உண்மையான புள்ளி விவரங்களை அறிந்து குற்றம் சாட்டுவது, முதல்வர் பதவிக்கு அழகாகும்.

* தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக இருந்ததால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும், என ஜெயலலிதா செய்த அறிவிப்பு குறித்து?

ஜெயலலிதா டில்லி சென்றபோது, அவரது கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். நள்ளிரவு என்பதால், அவ்வழியே வந்த போலீஸ் துணை கமிஷனர், ஓட்டலை மூடும்படி கூறியுள்ளார். அ.தி.மு.க.,வினர் அவரை மிரட்டியுள்ளனர். அவர் மிரட்டியவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள் ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோர் போலீஸ் நிலையம் சென்று, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அந்த அதிகாரி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அ.தி.மு.க., தோழமை கட்சியான தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஓமலூர் போலீஸ் நிலையம் சென்று மிரட்டியுள்ளார். இவை ஒரு மாத கால ஆட்சியின் சாதனைகள். இது தான் அ.தி.மு.க., அரசு, காவல் துறைக்கு தரும் பாதுகாப்பின் லட்சணம் என மக்கள் பேசத் துவங்கி உள்ளனர்.

* ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?

தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதி.

* "லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது' என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

நான் பிரதமரை, அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று சொன்னது, நாம் அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம், என்று உலகத்தின் முன்பு தெளிவாக்க பயன்படும் என்பதால்தான். எனது கருத்து எந்த அடிப்படையில் சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையில் நேற்று பிரதமரே, லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பதில், ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார். "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற தி.மு.க.,வின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவு படுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
jm praveen - londan ,யுனைடெட் கிங்டம்
கலைஞர் ஐய்யா கடந்த நான்கரை வருடங்கள் உங்கள் ஆட்சி சிறந்த ஆட்சியாகத்தான் இருந்தது .நாங்களும் உங்களுக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்தோம் . அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வைத்தோம் .கடைசி அரை வருடத்தில் உங்கள் ஆட்சி மேலும் சிறப்பாகத்தான் இருந்தது .ஆனால் நாங்கள் தான் கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தால் மாற்றப்பட்டு விட்டோம் . ஊழல் , ஈழம் போன்ற சில தவறான குற்றசாட்டுகளாலும் , விலைவாசி உயர்வு , மின்வெட்டு போன்ற எந்த ஆட்சி இருந்தாலும் வரக்கூடிய குறைபாடுகளாலும் சிறந்த சிந்தித்து பல திட்டங்கள் தந்த நல்லாட்சியை அவசரப்பட்டு மாற்றி விட்டோம் .செய்நன்றி மறந்து விட்டோம் .அதற்க்கான பலனை அனுபவித்து வருகிறோம் .ஆட்சியில் இல்லாவிட்டாலும் நீங்கள் ஆற்றும் ஜனநாயக கடமை எங்களை திரும்பவும் உங்கள் ஆதரவாளராக மாற்றயுள்ளது ...

கருத்துகள் இல்லை: