ஞாயிறு, 26 ஜூன், 2011

பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” என்ற சித்தாந்தத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவரன் : குமரன் பத்மநாதன்

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க முயற்சி எடுப்பேன் என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையில் முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த அவர் அங்கிருந்து கூறினார்.
”வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெறுவது கடினமான காரியம். ஆனால் அதனைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த நான் முயற்சி எடுப்பேன்” என்று அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தான் தற்போது அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனாலும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற சில மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வது தொடர்பில், இலங்கை அரசாங்க இயந்திர செயற்பாடுகளில் ஒரு தாமதம் காணப்படுவதாகவும் கூறிய கேபி அவர்கள், தமிழ் மற்றும் சிங்கள தீவிர போக்குடையவர்களின் அழுத்தமும் இந்த தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
”நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” என்ற சித்தாந்தத்தை ஆரம்பித்தவர்களில் தானும் ஒருவர் என்று கூறிய அவர், ஆனால், தற்போது காலம் மாறி விட்டது என்றும், தற்போதைக்கு முதலில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கே புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அரசியல் விவகாரங்கள் அதற்கு அடுத்ததாகவே பேசப்பட வேண்டும் என்றும் கூறினார்.
”என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது” என்றார் கேபி

கருத்துகள் இல்லை: