செவ்வாய், 28 ஜூன், 2011

கனிமொழிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்: திகார் சிறையில் உருக்கமான சந்திப்பு

புதுடில்லி:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழியை, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். தி.மு.க., தலைவர் கருணாநிதி திகார் சிறைக்கு வந்து சென்ற ஒரே வாரத்தில், ஸ்டாலினும் வந்து கனிமொழிக்கு ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க.,வின் முன்னணி பிரமுகர்களான கனிமொழியும், ராஜாவும் சிக்கி கைதாகியுள்ளனர். இவர்களோடு சேர்ந்து, கலைஞர் "டிவி'யின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைதாகியுள்ளார். இவர்கள் மூன்று பேருமே டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் வரை, வழக்கு விசாரணைக்காக டில்லி பாட்டியாலா இல்லத்தில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டிற்கு இவர்கள் தினந்தோறும் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டு, மாலையில் சிறைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.தினந்தோறும், நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராகும் போது, கோர்ட் அறையில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருப்பர். பின், மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்திவிட்டு மீண்டும் பேசியபடி இருப்பர். மாலையில் வேனில் ஏறி சிறைக்கு சென்றுவிடுவர்.

இதனால், தினந்தோறும், ஒரு "கெட் டு கெதர்' போல அமையும் இந்த சந்திப்புகளால், பெரிய அளவில் தனிமைச் சுமை தெரியாமல் இருந்தது. தவிர, தினந்தோறும் பகல்வேளைகளில் கோர்ட்டிற்கு வந்துவிடுவதால், கோர்ட்டில் உள்ள, "ஏசி' அறையில் உள்ளேயே அமர்ந்தும் இருப்பதால் வெயிலின் கொடுமை பெரியதாக பாதிக்கவில்லை.ஆனால், கோர்ட்டிற்கு கோடைகால விடுமுறை விடப்பட்டதில் இருந்து இவர்கள் யாரும் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படாமல் சிறையிலேயே உள்ளனர். கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூலை 4ம் தேதி தான் மீண்டும் கோர்ட்டுகள் திறக்கப்படவுள்ளன. அதுவரை சிறையிலேயே இருந்து வருவதால் தனிமைச் சுமையும், சுகாதார வசதியின்மையும், வெயில் கொடுமையும் ஆட்டிப்படைப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் மகளை பார்த்து நேரில் ஆறுதல் தெரிவிக்க நினைத்து கடந்த 21ம் தேதி முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, டில்லிக்கு வந்தார். சிறையில் அடைக்கப்பட்டவுடன் ஏற்கனவே ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் சென்ற கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மறுக்கப்பட்டவுடன் இரண்டாம் முறையாக கனிமொழியை நேரில் பார்க்க வந்திருந்தார். தன் கருப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு, தாரை தாரையாக கண்ணீர் விட்டு கலங்கிய கருணாநிதி, கனிமொழிக்கு தைரியமும், நம்பிக்கையும், ஆறுதலையும் அளித்துவிட்டு சென்னைக்கு திரும்பினார்.இந்த சூழ்நிலையில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், டில்லிக்கு வந்திருந்தார். நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டில்லிக்கு வந்து சேர்ந்த ஸ்டாலின், நேராக நட்சத்திர சொகுசு ஓட்டலுக்கு சென்று தங்கினார். டில்லி புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு அருகிலேயே உள்ள லீலா கெப்பின்ஸ்கி என்ற ஓட்டலில் தங்கினார். தன் தந்தையான கருணாநிதி தங்கியிருந்த அதே ஓட்டலில் தங்கிய ஸ்டாலினும், மீடியாக்களை சந்திக்கவில்லை. கருணாநிதி விசிட்டின்போது மீடியாக்களுக்கு எப்படி அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டதோ, அதுபோலவே நேற்று ஸ்டாலின் தங்கியிருந்தபோதும் மீடியாக்கள் விரட்டப்பட்டன.

நாள் முழுவதும் ஓட்டலில் தங்கியிருந்தபோது, ஸ்டாலினை முக்கிய தலைவர்களோ, பிரமுகர்களோ சந்திக்கவில்லை. கட்சியினர் மட்டுமே உடன் இருந்தனர். பின், மாலை 4 மணிக்கு ஓட்டலைவிட்டு கார் மூலம் திகார் சிறைக்கு ஸ்டாலின் விரைந்தார். அவருடன், டி.ஆர்.பாலு, விஜயன், சுகவனம் ஆகியோரும் சென்றனர்.கனிமொழி அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் சிறையான, 6ம் நம்பர் சிறைக்கு ஸ்டாலின் கார் உள்ளே சென்று நின்றது. அப்போது கனிமொழியை சந்தித்துவிட்டு திரும்பிய, ராஜாவின் மனைவியான பரமேஸ்வரியை வழியிலேயே ஸ்டாலின் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.பின், உள்ளே சென்று கனிமொழியை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சரியாக மாலை, 4.50 முதல், 5.20 மணிவரை அரைமணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, 4ம் நம்பர் சிறைக்கு ஸ்டாலின் விரைந்தார். அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கலைஞர் "டிவி' நிர்வாகியான சரத்குமார் ரெட்டியை சந்தித்து, பத்து நிமிடங்கள் பேசி ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு ஒன்றாம் எண் சிறைக்கு விரைந்த ஸ்டாலின், அங்கு அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜாவையும் சந்தித்துப் பேசினார். சில நிமிடங்கள் அவரோடு பேசி ஆறுதல் தெரிவித்து விட்டு வெளியில் வந்தார். சிறையை விட்டு வெளியில் வந்த பின், காரில் கிளம்பிய ஸ்டாலின், நேராக விமான நிலையத்திற்கு விரைந்தார். அங்கு, 8 மணி இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு இரவே திரும்பினார்.

கருத்துகள் இல்லை: