வியாழன், 30 ஜூன், 2011

புருலியா ஆயுத கடத்தல் மத்திய அரசு சி பி ஐ கூட்டுக்களவு ?

டெல்லி: புரூலியா ஆயுத வழக்கில் முக்கியக் குற்றவாளியான கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி உத்தரவிட டென்மார்க் கோர்ட் மறுத்து விட்டது. இதனால் சிபிஐக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

1995ம் ஆண்டு இந்தியாவை பரபரப்புக்குள்ளாக்கிய சம்பவம் மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் விமானத்திலிருந்து விழுந்த ஆயுதங்கள். இந்த ஆயுத மழைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏகே 47, தாக்குதல் துப்பாக்கிகள், பீரங்கி எதிர்ப்பு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் 1995ம் ஆண்டு சடிசம்பர் 17ம் தேதி புரூலியாவில் உள்ள வயல் வெளியில் விழுந்தன. அந்த வழியாக சென்ற வெளிநாட்டு விமானத்திலிருந்து இவை விழுந்தன.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதே ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணையில் கிம் டேவி முக்கியக் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க 1996ம் ஆண்டு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

2001ம் ஆண்டு கிம் டேவி டென்மார்க்கில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நாடு கடத்திக் கொண்டு வர இந்தியா கடுமையாக முயற்சித்தது. இரு நாடுகளுக்கும் இடையே நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லாததால் அது பெரும் சிக்கலாக இருந்து வந்தது.

இந்த நிலையில் டென்மார்க் கோர்ட்டில், கிம் டேவியை நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. டேவி தீவிரவாத செயலுடன் தொடர்புடையவர் என்பதற்கான ஆதாரத்தையும் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் கிம் டேவி ஒரு டிவி பேட்டியில் அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசை சீர்குலைத்து பதவியிலிருந்து நீக்க சதி செய்தார். இதற்காக நக்சலைட்களுக்கு ஆயுதம் வழங்க தங்களை அணுகியிருந்தார் என்று கூறியிருந்தார். இதை உடனடியாக மத்திய அரசு மறுத்து விட்டது.

இந்த நிலையில் கிம் டேவியை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்று டென்மார்க் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் சிபிஐக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் கிம் டேவியை நாடு கடத்திக் கொண்டு செல்ல டென்மார்க் அரசு இரு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. அவருக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது, சிறைத் தண்டனை விதிப்பதாக இருந்தால், அந்தத் தண்டனையை கிம் டேவி டென்மார்க் சிறைகளில் கழிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகள்.

இதை எதிர்த்து டேவி டென்மார்க் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் தற்போது தடை உத்தரவு போட்டு விட்டதால் டேவியைக் கொண்டு வரும் வாய்ப்பை சிபிஐ இழந்துள்ளது.

இருப்பினும் இதுகுறித்து டென்மார்க் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.

English summary
Kim Davy, the main accused in the Purulia arms drop case, will not be extradited to India for now. A five-member Constitutional bench of the Danish high court has rejected Davy's extradition plea in connection with the Purulia arms drop case. The Danish government had allowed the extradition of Davy after getting a number of assurances from India with two important ones being that no death penalty would be given to him and permission to serve imprisonment, if decided by court, in Denmark prisons. The order was challenged by Davy in a Danish court which ruled in his favour.

கருத்துகள் இல்லை: