சனி, 9 ஏப்ரல், 2011

EVKSஇளங்கோவன்: கலைஞர் இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை

கலைஞரை விமர்சித்தது வேறு விஷயம்

கலைஞரை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம் என, ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் தொடர்வது காலத்தின் கட்டாயம். மக்களுக்கு தேவையானதைச் செய்யும் ஆட்சியை மாற்றிவிடக்கூடாது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, பொருளாதார நிபுணர்கள் சாத்தியமே இல்லை என்றனர். ஆனால், காமராஜர் சாதித்துக் காட்டினார். அதுபோல் கலைஞர் இலவச "டிவி' என்று அறிவித்தபோது, நானே நம்பவில்லை. நிபுணர்களும் சாத்தியமில்லை என்றனர். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி இலவச "டிவி' வழங்கினார். ஜெயலலிதா இதற்கு முன் ஐந்தாண்டுகளில் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை; மாக்களைப்பற்றிதான் சிந்தித்தார். யானைகளுக்கு முகாம் நடத்தியதுதான் அவரதுசாதனை.

கலைஞரை நான் பலமுறை விமர்சித்துள்ளேன் என்பது வேறு விஷயம். ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மக்களுக்குத் தேவையான திட்டங்களை
செயல்படுத்தினார். என் சுயமரியாதைதான் முக்கியம்; ஏழை,எளிய மக்களைப்பற்றி கவலையில்லை என்கிற ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால், நடந்து வரும் திட்டங்களும் முடங்கிப்போகும். வரவேண்டிய நல்ல புதிய திட்டங்களும் வராமல் போய்விடும். யார் பெரியவர் என்ற போட்டியால் தமிழகத்தில் வளச்சி தடைபடும்.

தமிழகத்துக்கு நல்லது செய்யும் இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் கேட்கும் திட்டங்களை எல்லாம் மத்திய அரசு தரும். என்னைப் பொறுத்தவரை உதயசூரியன், கை சின்னங்கள் வேறு வேறு அல்ல. அதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சேகர்பாபுவையும், ராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்யுங்கள்

கருத்துகள் இல்லை: